Uber Taxi கார்களில் இனி இந்த தொழிற்நுட்பம் கட்டாயம் இருக்கும்... பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!!
டாக்ஸி சேவைக்கு பயன்படுத்தப்படும் தனது கார்களில் அட்டகாசமான தொழிற்நுட்ப வசதியை உபேர் (Uber) நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த மாதிரியான தொழிற்நுட்ப வசதி அது? அதன் மூலமாக கிடைக்க பெறும் பயன்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
பயணத்தின் போது கார்களில் உள்ள பயணிகள் அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும். முன்பு, முன் இருக்கைகளில் அமர்ந்திருப்போர் கட்டாயம் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என இருந்த நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரின் விபத்திற்கு பிறகு பின் வரிசை இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட்பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம் என்கிற பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது.

இதனால் சாலை போக்குவரத்து விதிமுறைகளில் இது தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், பிரபல கார் டாக்ஸி நிறுவனமான உபேர் தனது சேவையில் உள்ள கார்களில் சீட்பெல்ட் தொடர்பான புதிய தொழிற்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த தொழிற்நுட்ப வசதி, புதிய ஆடியோ சீட்பெல்ட் ரிமைண்டர் (Audio Seatbelt Reminder) ஆகும்.
பயணத்தின்போது காரின் பின் இருக்கைகளில் அமர்ந்திருப்போர் சீட்பெல்ட் அணியாமல் இருந்தால், இந்த தொழிற்நுட்பம் மனித குரலில் சீட் பெல்ட் அணியாதது குறித்த எச்சரிக்கைகளை தெரிவிக்கும். இதன் மூலமாக தங்களது டாக்ஸி சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்கிற நம்பிக்கையில் உபேர் நிறுவனம் உள்ளது. இந்த ஆடியோ சீட்பெல்ட் ரிமைண்டர் தொழிற்நுட்பம் முதலாவதாக ஐதராபாத்தில் உள்ள உபேர் டாக்ஸிகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தொழிற்நுட்பம் குறித்து இந்தியா மற்றும் தென்னாசியாவிற்கான உபேர் நிறுவனத்தின் பாதுகாப்பு செயல்பாடுகள் பிரிவின் முதன்மை அதிகாரி சூராஜ் நாயர் கருத்து தெரிவிக்கையில், "பாதுகாப்பு தொடர்பான எங்கள் பணி ஒருபோதும் நிற்காது என்று நாங்கள் நம்புகிறோம். தொழிற்நுட்ப அம்சங்கள் மூலம் பயணிகள் மற்றும் டிரைவர்கள் என இருவரது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ஐதராபாத்தில் ஆடியோ சீட்பெல்ட் ரிமைண்டரை கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய அம்சம் பயணிகள் சீட்பெல்ட் அணிவதை ஊக்குவிக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும். மேலும், ஐதராபாத்தில் சாலை பாதுகாப்பில் இது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார். இவரது கருத்துப்படி, காருக்குள் பயணிகள் ஏறியவுடன் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பதை இந்த தொழிற்நுட்பம் தெரிவித்துவிடும்.
அதாவது, வாடிக்கையாளர்கள் உபேர் காருக்குள் ஏறியவுடன் அவர்களது பயணம் குறித்த விபரங்கள் உபேர் கார் ஓட்டுனருக்கு சென்றுவிடுவதை போல், அவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற குறுந்தகவலும் டிரைவரின் மொபைல் போனில் இருந்து ஒலிக்கும். அதேபோல், உபேர் காரை புக் செய்தவரின் மொபைல் போனுக்கும் உபேர் செயலி வாயிலாக இதுகுறித்த எச்சரிக்கை சென்றுவிடும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
காரில் பயணிப்போர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கும் தொழிற்நுட்பங்கள் ஒன்றும் நம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதியது அல்ல. ஆனால் தற்சமயம் முன் இருக்கை பயணிகள் சீட்பெல்ட் அணியாமல் இருந்தால் மட்டுமே இவ்வாறான எச்சரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. இதனை உபேர் நிறுவனம் பின் இருக்கை பயணிகளுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








