ஊபர் டேக்ஸியை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்கள் அக்கவுண்ட் முடங்க வாய்ப்புள்ளது?
நீங்கள் ஊபர் டேக்ஸியில் அடிக்கடி பயணிக்கும் நபராக இருந்தால் இதனைக் கட்டாயம் படித்து விடுங்கள். இல்லையேல் நாளை நீங்களும் ஊபர் நிறுவனத்தால் தண்டிக்கப்படலாம்.

வாடகை கார் சேவையில் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமாகின. இவற்றின் வருகையால், வாடகை கார் சந்தையில் பெரும் புரட்சி ஏற்பட்டது என்றே கூறலாம். மேலும், நாட்டில் உள்ள வாடகை கார் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தனர். ஏனென்றால், மிகவும் மலிவான வாடகையில் காரில் பயணிக்கும் வசதியை இந்த நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன.

மேலும், வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாக வாகனங்களை புக் செய்யும் வசதியினையும் இந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. அதன்படி, பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆப் உருவாக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாகனங்களைப் புக் செய்து பயனடைந்தனர். மேலும், வாகனங்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலையும் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான், ஊபர் நிறுவனம் உணவு டெலிவரி சேவையை இந்தியாவில் சமீபத்தில் தொடங்கியது. அதற்காக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆப் மூலம் தங்களது வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை டெலிவரி பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, ஊபர் கால்டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக படகு சவாரி (ஊபர்போட்) சேவையையும் தொடங்க உள்ளது. அவ்வாறு, மஹராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்த சேவையை இன்று முதல் (பிப்: 1) தொடங்குகிறது.

இந்நிலையில், உணவு மற்றும் போக்குவரத்து சேவையில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஊபர் நிறுவனம், சமீபகாலமாக வாடகை கார்களைச் சார்ந்து அதிகரித்து வரும் குற்றங்களைத் தவிர்க்கும் வகையில் சில நடைமுறைகளை ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியுள்ளது.

அதனை மீறும் பட்சத்தில், ஓட்டுநர் அல்லது வாடிக்கையாளர், யாராக இருந்தாலும் அவர்களது ஊபர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊபர் வெளியிட்டுள்ள தகவல்
ஊபர் வாகனத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஓட்டுநரை தரம் குறைவாகவோ, இழுவுபடுத்தியோ பேசக்கூடாது. அதேபோன்று ஓட்டுநரும் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக பேசக்கூடாது.
சவாரி முடிந்த பின்னர், வாடிக்கையாளர் கார் ஓட்டுநரைத் தொடர்புக் கொள்ளக்கூடாது. கார் ஓட்டுநரும் வாடிக்கையாளரைத் தொடர்புக் கொண்டுப் பேசக்கூடாது.

பயணத்தின் போது வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர், பாலியல் சீண்டலை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
மேலும், பயணத்தின்போது வாகனத்துக்கு எந்தவொரு இழுப்பும் (Damage) ஏற்படாதுவாறு பயணிகள் பயணம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும்படி ஈடுபடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஊபர் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், யாரேனும் பழிவாங்கும் நோக்கில் ஓட்டுநர் மீது புகார் தெரிவித்தால், சவாரியை நம்பியிருக்கும் அவரது வருமானம் இழப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications








