சமூக இடைவெளியின்றி, ஒரே காரில், 9 பேர்...!! கோபத்தின் உச்சத்திற்கே சென்ற போலீஸார்!
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே காரில் சுமார் 9 பேர் பயணித்து வந்தது போலீஸாரை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

செடான் ரக கார்கள் பொதுவாகவே பயணிப்பதற்கு மிகவும் சவுகரியமான வாகனங்களாகும். இருப்பினும் பெரும்பான்மையான கார்களில் அதிகப்பட்சமாக 5 நபர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

கார்னிவல், இன்னோவா க்ரிஸ்டா போன்ற பெரிய தோற்றம் கொண்ட கார்கள் என்றால் 7ல் இருந்து 8 நபர்கள் அமர்ந்து செல்லலாம். ஏனெனில் இதற்காகவே அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால் தற்போதைய அசாதாரண சூழலில் எந்த காராக இருந்தாலும் சரி இருவர் மட்டுமே முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி கொரோனா பரவல் அதிகமாக உள்ள வெளிநாடுகளிலும் இதே நிலை தான்.

இப்படியிருக்க, இங்கிலாந்தில் ஒரே காரில் 9 பேர் முற்றிலுமாக சமூக இடைவெளி இன்றி பயணம் செய்துள்ளனர். நார்த் யார்க்ஷ்யரில் போலீஸார் சோதனையின்போது இவர்கள் பயணித்து வந்த ஸ்கோடா ஆக்டேவியா கார் சிக்கியுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா செடான் காரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த காரில் சவுகரியமாக 5 பேர் வரையில் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் இந்த காரில் 9 பேர் பயணம் செய்துள்ளனர். முதலில் போலீஸார் காரை பார்வையிட்ட போது முன்பக்கத்தில் ஓட்டுனர் உள்பட இருவர் அமர்ந்திருந்துள்ளனர்.
ஆனால் இரண்டாவது இருக்கை வரிசையில் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு 5 பேர் இருந்துள்ளனர். மொத்தமாக 7 பேர் ஒரே காரில் பயணம் செய்து வருகிறீர்களா? என போலீஸார் அவர்களை காட்டமாக கேள்வி கேட்டு கொண்டே பின்பக்க பொனெட்டை திறக்கையில் அதில் இருந்து இருவர் எழுந்துள்ளனர்.
பிறகு என்ன சொல்லவா வேண்டும், போலீஸார் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்க வேண்டும். இது இன்னும் முடியவில்லை. இவ்வளவு பேரா பயணம் செய்வது என சிலரை காரில் இருந்து இறக்க, காரின் ஒரு கதவை பிடித்து போலீஸ் ஒருவர் இழுத்துள்ளார்.

ஆனால் அது திறக்கவில்லை. அவர்களிடம் கேட்டதற்கு, காரில் மொத்தம் உள்ள நான்கு கதவுகளில் இரு கதவுகள் பிரச்சனையில் உள்ளன, ஆதலால் அவை திறப்பதில்லை என கூலாக கூறியுள்ளனர். அப்படியே காரின் முன்பக்கத்திற்கு வந்தால் முன் டயர்களில் ஒன்று தேய்ந்து போய், உள்ளே இருக்கும் லைனிங் வரையில் தெரிந்துள்ளது.
பிறகு என்ன, இப்படிப்பட்ட காரை சாலையில் ஓட்டி வந்ததே பெரிய தப்பு. அதிலும் ஒன்பது பேர் பயணம் செய்து வந்தது மிக பெரிய தவறு என அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் அபராதத்தை விதித்துள்ளனர். இவர்களுக்கு நம்மூர் இளைஞர்களே எவ்வளவோ பரவாயில்லை...


Click it and Unblock the Notifications








