இங்கிலாந்து பிரதமருக்கு இவ்ளோ பெரிய அபராதமா! இந்தியால பஞ்சாயத்து கவுன்சிலருக்கு கூட போலீஸால ஃபைன் போட முடியாது
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் காவல் துறையினர் லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுள்ளன. அதுவும் அரசியல்வாதிகள் போன்றவர்கள் எல்லாம் தவறு செய்தால், காவல் துறையினர் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்னும் அளவிற்கு இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால் அரசின் உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு காவல் துறையினர் அபராதம் (Fine) விதித்த நிகழ்வு, யுனைடெட் கிங்டமில் (United Kingdom), அதாவது இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக (PM) பதவி வகித்து வருபவர் ரிஷி சுனக் (Rishi Sunak). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், ரிஷி சுனக்கின் வளர்ச்சியை இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில்தான், ரிஷி சுனக்கிற்கு தற்போது காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

எதற்காக அபராதம்?
காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் (Seatbelt) அணியவில்லை என்பதற்காகவே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் ரிஷி சுனக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது லாங்ஷயர் (Lancashire) பகுதியில், சீட் பெல்ட் அணியாமல் ரிஷி சுனக் காரில் பயணம் செய்தார். இது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி தெரிந்தது?
சமூக வலை தளங்களில் வெளியிடுவதற்காக, காரில் அமர்ந்து கொண்டு, வீடியோ ஒன்றை ரிஷி சுனக் பதிவு செய்திருந்தார். இது அரசின் திட்டம் ஒன்றை விவரிக்கும் வீடியோ ஆகும். ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது, இந்த வீடியோவில் மிகவும் தெளிவாக தெரிந்தது. இதை அடிப்படையாக வைத்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு காவல் துறையினர் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.

மன்னிப்பு கோரினார்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் காவல் துறையினர் விதித்த அபராதத்தை செலுத்த அவர் ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களின்படி, காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணியாத ஒருவருக்கு, காவல் துறையினரால் இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்க முடியும்.
கோர்ட்டுக்கு போனால் இன்னும் அதிகம்!
இந்த தொகைதான் ரிஷி சுனக்கிற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவே வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால், இந்த அபராத தொகை இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் ரூபாயாக உயர்வதற்கான வாய்ப்புகள் கூட இல்லை. போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கே அபராதம் விதித்துள்ள நிகழ்வு, சர்வதேச அரங்கில் தற்போது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவாக இருந்தால்?
இதுவே இந்தியாவாக இருந்தால், பஞ்சாயத்து கவுன்சிலருக்கு கூட, காவல் துறையினரால் அபராதம் விதிக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நாம் கற்று கொள்வதற்கு 2 முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. எப்பேர்பட்ட பதவியை வகிப்பவராக இருந்தாலும், தவறு செய்தால் அது தவறுதான் என்பது முதல் விஷயம். இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகளை போல், கடமை தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரை காக்கும்!
காரில் பயணிக்கும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். காரில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று சீட் பெல்ட். கார் திடீரென விபத்தில் சிக்க நேரிட்டால், உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதை சீட் பெல்ட் தடுக்கும். எனவே காரில் பயணம் செய்யும்போது, கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








