உலகின் மிக உயரமான சாலை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் அடி!! ஜம்மு காஷ்மீரில் திறப்பு
உலகின் மிக உயர்ந்த போக்குவரத்து சாலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. அம்லிங் லா பாஸ் என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகிலேயே மிக உயரமாக சுமார் 19,300 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை எல்லை சாலைகள் அமைப்பு (BRO) கட்டமைத்துள்ளது. இதற்குமுன் உலகின் மிக உயரமான சாலையாக பொலிவியா நாட்டில் உள்ள உடுருங்கு எரிமலை சாலை விளங்கியது.

இந்த பெயரினை தற்போது இந்தியாவின் அம்லிங் லா பாஸ் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்னர் கார்டுங் லா என்கிற பகுதி மிக உயரத்தில் போக்குவரத்து சாலையை கொண்டதாக பார்க்கப்பட்டது. தற்போது இதனையும் அம்லிங் லா பாஸ் உயரமான சாலையாக முந்தியுள்ளது.
உடுருங்கு எரிமலை சாலை 18,953 அடி உயரத்திலும், இந்தியாவின் கார்டுங் லா பாஸ் 17,582 அடி உயரத்திலும் போக்குவரத்து சாலையை கொண்டுள்ளன. ஆனால் புதிய அம்லிங் லா பாஸ் 19,300 அடி உயரத்தில் சாலையை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இமயமலையின் அடித்தள கேம்ப் பகுதிகளை காட்டிலும் அம்லிங் லா பாஸ் உயரமானது.

திபெத்தில் உள்ள இமயமலையின் வடக்கு அடித்தள கேம்ப் 16,900 அடி உயரத்திலும், தெற்கு அடித்தள கேம்ப் நேபாளத்தில் 17,598 அடி உயரத்திலும் உள்ளன. உயரமான இடத்தில் சாலையை கொண்டுள்ளது மட்டுமில்லாமல், அம்லிங் லா பாஸ் இந்திய எல்லை சாலை அமைப்பாளர்களின் நேர்த்தியான வடிவமைப்பையும் பிரதிபலிக்கிறது.

அம்லிங் லா பாஸ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எல்லை சாலைகளுக்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த அமைப்பு தான் முழு பொறுப்பாகும். இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால் எல்லையில் செல்லும் சாலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அதிகம் மழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடியதாக இருக்கலாம்.
வடமேற்கு பகுதிகளுக்கு சென்றால் மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். மனிதர்களே வாழ முடியாத அளவிற்கு எப்போதும் பனி கொட்டி கொண்டிருக்கும் எல்லை பகுதிகளும் நம் நாட்டில் உள்ளன. இருப்பினும் எல்லை சாலைகள் பராமரிக்கும் அமைப்பு மிகவும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

அதற்கு அம்லிங் லா பாஸ் போக்குவரத்து சாலை மிக சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட 20 ஆயிரம் அடி உயரத்தில் பொது போக்குவரத்து சாலை ஒன்றை உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. பனிகாலங்களில் வெப்பநிலை இந்த பகுதியில் -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். அதேநேரம் ஆக்ஸிஜன் அளவும் கடல் மட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 50% குறைந்துவிடும்.
இவ்வளவு சவால்கள் இருந்த போதிலும் வெற்றிகரமாக அம்லிங் லா பாஸ் கட்டமைப்பட்டு தற்போது பொது பயன்பாட்டிற்கும் திறந்து விடப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீரில் உள்ள லே உடன் சிசும்லே மற்றும் டெம்சோக் என்ற குறு நகரங்களை இணைக்கும் விதத்தில் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சாலைகளை உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினர் தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மிக அழகான, செல்லத்தகுந்த பகுதிகள் என்றால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வரலாம். உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய போக்குவரத்து சாலை சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இதன் மூலமாக அந்த பகுதியில் பொருளாதாரம் மேம்படும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே இந்த உலகின் உயரமான சாலை உருவாக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியனாக நாம் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

இந்த சாலையினால் லடாக் பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புவோம். உண்மையில் இவ்வாறான பகுதிகளை வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிடல் வேண்டும். அந்த அளவிற்கு இவை மனதிற்கு மிகுந்த அமைதியை தரவல்லவை.
இவ்வாறான சாலைகளில் பயணம் செய்ய ஏற்ற மோட்டார்சைக்கிள்களாக ராயல் என்பீல்டு ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ், ஹோண்டா சிபி500எக்ஸ், சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, கேடிஎம் 250 & 390 அட்வென்ச்சர், கவாஸாகி வெர்ஸஸ்650 உள்ளிட்ட பைக்குகள் சந்தையில் விற்பனையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








