குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை... எந்த மாநிலத்தில் தெரிஞ்சா உடனே சுற்றுலா கிளம்பிடுவீங்க...
அனைவருக்கும் பறக்கும் அனுபவம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில் குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அனைவருக்கும் பறக்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனம், குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. மத்திய அரசின் உதான் (UDAN) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சேவை தற்போது உத்தர்காண்ட் மாநிலத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் சிலவற்றை உத்தர்காண்ட் மாநிலமும் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைக் கருத்தில் கொண்டும், அனைவருக்கும் ஹெலிகாப்டர் பயணத்தை அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இச்சேவை அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது.

மத்திய அரசின் மூலம் கடந்த 2017ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டமே உதான். சாதாரண மக்களும் பறக்கலாம் என்பதே உதான் என்பதற்கான அர்த்தம் ஆகும். இத்திட்டத்தின் மூலமே பவன் ஹான்ஸ் லிமிடெட் இந்த சிறப்பு சேவையை உத்தர்காண்டில் தொடங்கியிருக்கின்றது.

அம்மாநிலத்தின் டெஹ்ராடூன்-நியூ டெஹ்ரி-ஸ்ரீநகர்-கவுசர் ஆகிய நான்கு வழித் தடங்களில் இந்த சேவைத் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதனை அம்மாநிலத்தின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவட் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங், "அரசின் முயற்சியின் மூலம் நாட்டின் பிராந்தியங்களை வான் வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஹெலிகாப்டர் சேவை மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ச்சியடைய செய்யும்" என கூறினார்.

பவன் ஹான்ஸ் நிறுவனம், உத்தர்காண்டில் வாரத்திற்கு மூன்று முறை ஹெலிகாப்டர் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. அந்த நாட்கள்குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, மாநிலத்தின் மலை பாங்கான பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்தவாறு அதன் பயணிகளுக்கு பயண அனுபவத்தை வழங்கப்பட இருக்கின்றது. இதற்கான கட்டணமாக ஒரு இருக்கைக்கு ரூ. 2,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கூறப்பட்டுள்ள பகுதியுடன் கூடுதலாக மேலும் சில வழித்தடங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, டெஹ்ராடூனில் இருந்து ராம்நகர், பாண்ட்நகர், நைனிதல், அல்மோரா, பிதோராகர்ஹ் மற்றும் முஸ்ஸோரி ஆகிய பகுதிகளிலும் குறைந்த கட்டண ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட இருக்கின்றது.

உதான் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சேவைமூலம் மேலும் பலர் பயனடைவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இத்திட்டத்தைப் பற்றி நினைவுக் கூர்ந்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங், "உதான் விமான சேவை மூலம் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்திருப்பதாக" பெருமிதம் கொண்டார்.

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த சேவை தற்போது செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மூலம் 274 வழித் தடங்கள், 45 விமான நிலையங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதான் சேவையை ஆரம்பித்த வெறும் 3 வருடங்களில் இது மிகப்பெரிய வளர்ச்சி என ஹர்தீப் சிங் பூரி பூரிப்படைந்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களிலேயே சிறப்பான திட்டம் என்றே இதனைக் கூறலாம். இத்திட்டத்தின்மூலம் பல நடுத்தர வர்க்கத்தினர்கூட சுலபமாக விமான பயணத்தை மேற்கொள்ளும் சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








