துளி கூட பயமில்லை, ஒரே ஒரு பதில் தான்... ஸ்கூட்டர் ஓட்டிவந்த சிறுவர்களை போலீஸாரே வழியனுப்பி வைத்தனர்!!
ஹெல்மெட் அணிந்து கொண்டு, சரியான வேகத்தில், அத்தனை உரிம ஆவணங்களையும் வைத்து கொண்டு பயணம் செய்தாலும் கூட, நமக்கு நேரம் சரியில்லை என்றால் போலீஸாரிடம் ஏதோ காரணத்திற்காக சிக்கி கொள்ள நேரும்.

இவ்வாறு இருக்கையில், குறைந்த வயதில் வாகனம் ஓட்டுவது நாடு முழுவதுமே குற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. போதிய ஆவணங்கள் இல்லாமல், குறைந்த வயதில் வாகனத்தை சாலையில் ஓட்ட போலீஸார் அனுமதிப்பதில்லை.

ஆனால் ஆந்திர பிரதேசத்தில் ஸ்கூட்டரை போக்குவரத்து நிறைந்த சாலையில் ஓட்டி வந்த சிறுவன், சாமார்த்தியமான பதிலை கூறி அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளான். அப்படி அவன் என்ன கூறினான். ஏன் அவனை போலீஸார் அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தனர்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த பதிவில் பதிலினை காணலாம்.

ஸ்கூட்டரில் இரு சிறுவர்கள் பயணம் செய்து வருவதை கண்ட போலீஸார் அவர்களை நிறுத்தி விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் மாஸ்க் & ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை, வாகன பதிவு சான்றிதழும் அவர்களிடம் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவர்கள் இருவரும் டீனேஜர்ஸ் என்று சொல்வதை காட்டிலும், சிறுவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருந்தும் போலீஸாரிடம் மாட்டிய அந்த சிறுவர்களின் முகத்தில் துளி கூட பயமில்லை.
Image Courtesy: ABN Telugu
ஸ்கூட்டரை ஓட்டிவந்த சிறுவன் வாயில் எதையோ போட்டு மென்றுக்கொண்டே அசால்டாக போலீஸாரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை ஏபிஎன் தெலுங்கு என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம். இந்த அசால்ட் தைரியத்திற்கு காரணம், இந்த சிறுவர்கள் ஓட்டிவந்தது எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.

அவற்றை ஓட்ட எந்தவொரு ஓட்டுனர் உரிமமோ அல்லது வாகன பதிவு சான்றிதழோ தேவையில்லை. இதை தான் இந்த சிறுவனமும் பதிலாக கூறியுள்ளான். எலக்ட்ரிக் வாகனத்தை ஓட்டுவதற்கு தேவையான பச்சை கார்ட் தன்னிடம் இருப்பதாக கூறி அதனை போலீஸாரிடம் காட்டியுள்ளான்.

இதனால் அவன் மீது எந்தவொரு வழக்கையும் போலீஸாரால் பதிவு செய்ய முடியவில்லை. பச்சை கார்டுடன், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான ஆவணங்களையும் சரிப்பார்த்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சாலையில் சிறுவர்கள் பயணிப்பதற்காக போலீஸாரே மற்ற வாகனங்களை வழிவிட செய்தது தான். எலக்ட்ரிக் வாகனம், இந்த ஒன்றினால் எவ்வளவு பெரிய சலுகை கிடைக்கிறது அல்லவா. இதுவே அந்த இடத்தில் எரிபொருள் ஸ்கூட்டராக இருந்திருந்தால் அங்கு நடந்த கதையே வேறாக இருந்திருக்கும்.

இந்திய அரசாங்கம் எலக்ட்ரிக் வாகனங்களை நாடு முழுவதும் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இதன்படி சில சலுகைகளையும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர்க்காக அறிவித்துள்ளது. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர் பதிவு சான்றிதழ், ஹெல்மெட் போன்றவற்றை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அதற்கு உங்களது எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் 250 வாட்ஸ் அல்லது அதற்கும் குறைவான மோட்டாரில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல் இத்தகைய மோட்டாரை கொண்ட இ-2வீலர்ஸை ஓட்ட வயது வரம்பு எதுவும் கிடையாது. இந்த ஒரு காரணத்தினாலேயே இந்த சிறுவர்கள் தொடர்ந்து சாலையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணிவது அவசியமில்லை என்றுதானே அரசாங்கம் கூறுகிறதே தவிர்த்து, ஹெல்மெட்டே அணிய வேண்டாம் என கூறவில்லை. எனவே பொது சாலையில், அதிலும் இவ்வாறான பிஸியான சாலையில் இயங்குகிறீர்கள் என்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்.

மோட்டார்சைக்கிளில் எத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், ஹெல்மெட் தான் ஒரு ரைடருக்கு முதன்மையான பாதுகாப்பாகும். இதனை நாம் பல விபத்து சம்பவங்களின் போது பார்த்துள்ளோம். வேகமாக செல்பவர்களுக்கு தான் ஹெல்மெட் தேவை என்றில்லை, மணிக்கு 20- 30kmph வேகத்தில் செல்பவர்கள் கூட ஹெல்மெட் இல்லாமல் விபத்தில் சிக்கி பெரும் காயங்களை கண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








