காதலிக்கு கடவுள் லம்போர்கினி கார் தருவார் என்ற நம்பிக்கையில் காதலன் செய்த மடத்தனம்... அதிர்ந்து போன மக்கள்...
காதலிக்கு கடவுள் லம்போர்கினி கார் தருவார் என்ற நம்பிக்கையில் இளைஞர் ஒருவர் செய்துள்ள காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மூட நம்பிக்கைகள் ஏதோ நமது நாட்டின் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது என ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். ஏனெனில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மூட நம்பிக்கைகளை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த வகையில் லம்போர்கினி கார் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர் ஒருவர் தனது உயிரை இழக்கும் சூழலுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவ்வாறான விபரீதம் எதுவும் நடக்கவில்லை. அதற்கு முன்பாக அந்த இளைஞரை, அவரது நண்பர்கள் காப்பாற்றி விட்டனர். ஜிம்பாப்வே நாட்டின் வனப்பகுதியில் நடைபெற்றுள்ள இந்த வினோதமான சம்பவம் தற்போது உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அதே நேரத்தில், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், 40 நாட்கள் உணவு அருந்தாமல் விரதம் இருக்கும்பட்சத்தில், கடவுள் லம்போர்கினி காரை பரிசாக தருவார் என நம்பியுள்ளார். அந்த 40 நாட்களும் வனப்பகுதியில்தான் இருக்க வேண்டும் எனவும் அவர் நினைத்துள்ளார். அந்த இளைஞரின் காதலிக்கு லம்போர்கினி நிறுவன கார்களை மிகவும் பிடிக்கும்.

எனவே தனது காதலிக்கு லம்போர்கினி காரை பரிசாக தர வேண்டும் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். ஆனால் லம்போர்கினி நிறுவன கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த காரை வாங்குவதற்கு தேவையான பணம் அந்த இளைஞரிடம் இல்லை. போதாக்குறைக்கு அவர் வேலையின்றியும் இருந்து வந்துள்ளார்.

எனவே வனப்பகுதியில் விரதம் இருந்தால், கடவுள் லம்போர்கினி காரை பரிசாக தருவார் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். இதன்படி ஜிம்பாப்வேயில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் அவர் யாருக்கும் தெரியாமல் விரதம் இருக்க ஆரம்பித்தார். ஆனால் விரதம் இருக்கும் அவரது முயற்சிகளுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

33 நாட்கள் விரதம் முடித்து விட்ட நிலையில், அந்த இளைஞரின் நண்பர்கள் எப்படியோ அவரை கண்டுபிடித்து விட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கிடைத்த அவரை, நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மார்க் முராடைரா என்னும் அந்த இளைஞர் தற்போது மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞருக்காக அவரது நண்பர்கள் நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். மார்க் முராடைராவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான கட்டணத்தை செலுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த இளைஞரின் செயல் சமூக வலை தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நெட்டிசன்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அவர் வேலையில்லாமல் உள்ளார் என்பதால், குறைந்தபட்சம் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவாது அவர் விரதம் இருந்திருக்கலாம் எனவும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். அதே சமயம் மறுபக்கம் லம்போர்கினி நிறுவன கார்களின் மீதான காதலை வெளிக்காட்டும் சம்பவமாகவும் இது அமைந்துள்ளது எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








