மறக்கவே முடியாது... சுகமான நினைவுகளை வழங்கிய கார்கள்... மாருதி 800 முதல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வரை
இந்திய மக்களுக்கு சுகமான நினைவுகளை தந்த கார்களை இந்த பதிவில் கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

இன்று கவர்ச்சிகரமான தோற்றத்துடனும், அதிநவீன வசதிகளுடனும் பல கார்கள் சந்தைக்கு வந்து விட்டன. என்னதான் இருந்தாலும் சில கார்களை மட்டும் நம்மால் வாழ்க்கையில் என்றைக்கும் மறக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு பழைய நினைவுகளை வரவழைக்கும் காலத்தால் அழியாத காவிய கார்கள் பற்றிய மலரும் நினைவுகளைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இங்கே நாங்கள் தொகுத்து வழங்கியிருக்கும் கார்கள் நிச்சயமாக உங்கள் மனதிற்கு நெருக்கமானவையாக இருக்கும். குறிப்பாக 90களில் பிறந்தவர்கள், இந்த கார்களுடன்தான் வளர்ந்திருப்பார்கள். எனவே நிச்சயம் அவர்களால் இந்த கார்கள் பற்றிய நினைவுகளை மனதில் இருந்து அகற்றவே முடியாது. வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

மாருதி 800 (Maruti 800)
இந்திய குடும்பங்கள் பலவற்றின் முதல் கார் மாருதி 800தான். சாதாரண மக்கள் மட்டுமல்லாது, விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பிரபலமான மனிதர்கள் பலரின் முதல் காரும் கூட இதுதான். இந்திய சந்தையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய தயாரிப்புகளில் மாருதி 800 காருக்கு முதன்மையான இடமுண்டு.

கடந்த 1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாருதி 800 காரின் உற்பத்தி, 2014ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. சுமார் 31 ஆண்டு காலம் மாருதி 800 உற்பத்தியில் இருந்து வந்தது. இதன் மூலம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடருக்கு பின், இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த இரண்டாவது கார் என்ற பெருமையை மாருதி 800 பெறுகிறது.

மாருதி 1000 (Maruti 1000)
மாருதி சுஸுகி நிறுவனம் 800 காரை வெற்றிகரமாக அறிமுகம் செய்த பின், இந்திய சந்தையில் களமிறக்கிய இரண்டாவது தயாரிப்பு 1000. இதுதான் பின் நாட்களில் எஸ்டீம் என அறியப்பட்டது. இந்த 4-டோர் செடான் ரக கார் நடுத்தர வர்க்க மக்களின் அந்தஸ்தை வெளிக்காட்டும் தயாரிப்பாக விளங்கியது. இந்த காரை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

மாருதி சுஸுகி 1000 கார்தான், அந்த நிறுவனத்தின் இருந்து வெளிவந்த முதல் செடான் ரக தயாரிப்பு. இதில், 46 எச்பி பவரை வெளிப்படுத்த கூடிய இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. பின் நாட்களில் எஸ்டீம் கார் இன்னும் அதிக சக்தி வாய்ந்த 1.3 லிட்டர் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்தது. இந்தியர்களால் மறக்க முடியாத கார்களில் இது மிகவும் முக்கியமானது.

மாருதி சுஸுகி ஜென் (Maruti Suzuki Zen)
இந்திய சந்தைக்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு ஜென். கடந்த 1993ம் ஆண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக இட வசதி கொண்டதாகவும் இருந்ததால், வெகு விரைவாகவே ஜென் பிரபலமாகி விட்டது. 1994ம் ஆண்டு முதல் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்தியாவின் முதல் உலக காராக இது பார்க்கப்படுகிறது.

பிரீமியர் பத்மினி (Premier Padmini)
பிரீமியர் பத்மினி கார் கடந்த 1964ம் ஆண்டு ஃபியட் 1100 டிலைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் நாட்களில்தான் அதன் பெயர் மாற்றப்பட்டது. அதன் காலகட்டத்தில், இந்தியாவில் சொகுசு காராக பிரீமியர் பத்மினி பார்க்கப்பட்டது. இவ்வளவு காலம் கடந்தும் கூட பிரீமியர் பத்மினி காரை இன்னமும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருபவர்கள் ஏராளம்.

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador)
இந்திய சாலைகளின் அரசன் என்ற பெயரை பெற்ற கார் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். இந்த கார் மீண்டும் விற்பனைக்கு வராதா? என்று ஏங்கி கொண்டிருப்பவர்கள் ஏராளம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் அம்பாஸிடர்தான். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் கடந்த 1957ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமானது.

கடந்த 2014ம் ஆண்டுதான் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதாவது சுமார் 57 ஆண்டு காலம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உற்பத்தியில் இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார் என்ற பெருமையை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் பெறுகிறது. அந்த கால கட்டங்களில், ஒருவருடைய அந்தஸ்தை வெளிக்காட்டும் காராக இது திகழ்ந்தது.

அரசியல்வாதிகள் உள்பட பிரபலமான மனிதர்கள் பலரும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடரில்தான் பயணித்தனர். இந்த காரில் பயணம் செய்யாத நபர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு இந்திய மக்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் இருந்தது. அத்துடன் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெயரையும் அம்பாஸிடர் சம்பாதித்து வைத்திருந்தது. இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








