அமெரிக்காவிற்கு இணையான சாலைகள்... பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு... கேக்கும்போதே சூப்பரா இருக்கே!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்தியாவில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் இந்த 25 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். இந்த 25 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மத்திய அரசு ஆரம்பம் முதலே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான சாலைகள் எப்படி வழிவகுக்கும்? என்பது தொடர்பாக தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

எனவே இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டிற்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தொலைவு 1.40 லட்சம் கிலோ மீட்டர் மட்டுமே. எனவே 2025ம் ஆண்டிற்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை என்ற இலக்கை அடைய வரும் நாட்களில் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தரமான தேசிய நெடுஞ்சாலைகளின் மூலம் நமது பயணங்கள் மட்டுமின்றி, சரக்குகளை கையாள்வதும் எளிமையாகும். அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை எளிமையாகவும், விரைவாகவும் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவேதான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான சாலைகளை வரும் காலங்களில் இந்தியாவிலும் பார்க்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அதே நேரத்தில் வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது என சமீப காலமாகவே மத்திய அரசு மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது.

இந்தியாவில் தற்போதே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி விட்டது. மத்திய அரசு கூடுதலாக இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்கினால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications