புதுசா கார் வாங்க இந்த ஒரு காரணம் போதுமே... மத்திய அரசின் டார்க்கெட் மொத்தமும் பேட்டரி மீதுதான்!!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கடந்த 10 வருடங்களில் தாக்கல் செய்ததிலேயே மிகவும் குறைவான நேரத்தில் வாசித்து முடிக்கப்பட்ட பட்ஜெட்டாக இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த 2025-26ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் கருதப்படுகிறது. குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்டாலும், கடந்த பட்ஜெட்களை போலவே 2025-26 பட்ஜெட்டும் பல தரமான அறிவிப்புகளை கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது, தனி நபர் வருமான வரிக்கான உச்சப்பட்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகும். இதனால், மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
இதன் விளைவாக, அடுத்த 1 வருடத்தில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்பட்டாலும், மத்திய அரசின் இந்த தைரியமான முடிவு நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கி, நாட்டில் கார் விற்பனையை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், முன்பு வருமான வரியாக செலுத்திக் கொண்டிருந்த பணத்துடன், கூடுதலாக பணம் சேர்த்து மாதத்தவணையாக செலுத்த தயாராக இருப்பவர்களால் புதியதாக கார் வாங்க முடியும். கார் மட்டுமின்றி, மற்ற வாகனங்களையும் வாங்க யோசித்து வந்தவர்களுக்கு இனி வழி பிறக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் மறுப்பக்கம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்யும் செலவு குறைய உள்ளது.
ஏனெனில், பேட்டரிகளுக்கான மூல பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக, பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்குதான் பலனளிக்கும் என்றாலும், அந்த நிறுவனங்கள் மனது வைத்தால் கஸ்டமர்களும் பயனடைவர். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி மட்டுமின்றி, மொபைல் போன் பேட்டரிகளுக்கான உற்பத்தி செலவும் குறையும் என்பதால், மொபைல் போன்களின் விலைகளும் குறையலாம்.

தற்போதைக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த வரிசையில் இந்தியாவையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே பேட்டரி உற்பத்தி செலவை குறைத்து வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதுடன், ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் மாருதி சுஸுகி, ஹூண்டாய், எம்ஜி, ஓலா எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களுக்கு இந்தியாவை இவி உற்பத்தி மையமாகவும் விளங்க வைக்கும்.
இதற்காகவே, தேசிய உற்பத்தி திட்டம் (National Manufacturing Mission) 2025-26 பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, சூரிய ஒளியில் செயல்படக்கூடிய வாகன பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள், மோட்டார்கள் & கண்ட்ரோலர்கள், எலக்ட்ரோலைசர்ஸ் (Electrolysers), காற்றலைக்கான டர்பைன்கள், அதிக-மின்னழுத்த டிரான்ஸ்மிஷன் கருவிகள் மற்றும் பெரிய அளவிலான கிரிட்-ஸ்கேல் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது ஊக்கவிக்கப்பட உள்ளது.

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்கள் உற்பத்தி துறைக்கு 2025-26ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் ஆனது ரூ.2,819 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை காட்டிலும் ரூ.681 கோடி குறைவாகும். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்தும் விதமாக சாம்பியன் OEM மானிய திட்டம் மற்றும் பாகங்கள் சாம்பியன் மானிய திட்டம் என 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கம்போல், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசின் பொது பட்ஜெட் அறிவிப்புகள் அடங்கியுள்ளன. அதேபோல், உலகளவில் இந்தியாவை எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக திகழ வைக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் நோக்கமாக இருப்பது இந்த பட்ஜெட் மூலம் மேலும் உறுதியாகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லாதது சற்று ஏமாற்றமே.


Click it and Unblock the Notifications









