2024 வரை பெட்ரோல் விலை கூடாது! லிட்டருக்கு ரூ10 குறைக்க மத்திய அரசு செம பிளான்!
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் பெட்ரோல் விலை தாறுமாறாக குறைய வாய்ப்புள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை வாங்கும் அளவை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தால் இது சாத்தியமாகும். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் கச்சா எண்ணெயின் விலை மாற்றம் ஏற்படாதது என்பது இல்லை. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் இந்தியா ஒரு ராஜதந்திர முடிவை எடுத்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் ரஷ்யா உடனான பொருளாதார தொடர்பை அறுத்தனர். ரஷ்யா உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கியமான நாடுகளில் ஒன்று. இதனால் ரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்தது.
அந்த நேரத்தில் உள்ளே புகுந்த இந்தியா ரஷ்யாவிடம் அடித்து பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. தற்போது சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 86.96 அமெரிக்க டாலர் அளவிலான பணம் கொடுத்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

அதே நேரம் ரஷ்யா கச்சா எண்ணெயை 68.21 அமெரிக்க டாலர் அளவிலனான பணம் கொடுத்து தான் இந்தியா இறக்குமதி செய்கிறது. அதாவது இந்தியாவிற்கு ஒரு பேரலுக்கு 18.75 அமெரிக்க டாலர் அளவிலான பணம் ரஷ்யக் கச்சா எண்ணெய்யின் மூலம் லாபமாக கிடைக்கிறது.
உக்ரைன்-ரஷ்யா போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு வெறும் இரண்டு சதவீதம் தான் இருக்கிறது. தற்போது ரஷ்யா குறைவான விலையில் கச்சா எண்ணெயை தருவதால் அதிகமான இறக்குமதியை செய்து தற்போது 46 சதவீதம் வரை ரஷ்யாவிலிருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியா கச்சா என்ணெக்காக முழுவதும் வெளிநாடுகளை நம்பி இருக்கும் நாடு என்பதால் எந்த நாட்டையும் இந்த விஷயத்தில் பகைத்துக் கொள்ள முடியாது. அதனால் அனைத்து நாடுகளுடனும் நட்பு பேண வேண்டும். இதனால் மற்ற நாடுகளுடன் கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்தை பெரிய அளவில் மாற்ற முடியாது.
இந்நிலையில் மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் ஒன்று கூடி இந்தியாவின் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை மாற்றம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசப்பட்டதாக தெரிகிறது.
இதற்காக மத்திய அரசு தற்போது ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவை அதிகரிக்க முடிவு செய்து இருக்கலாம். தற்போது 46 சதவீதமாக இருக்கும் அளவை இந்தியா 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அப்படி நடந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போது இருப்பதை விட கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் நடந்து விட்டால் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ 10 வரை கூட குறைய வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு குறைகிறது என்பது இந்தியா எவ்வளவு அளவிலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது என்பதை பொறுத்து மாறுபடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ரஷ்யா குறைவான விலையில் கச்சா எண்ணெய் நமக்கு விற்பனை செய்தாலும் மற்ற நாடுகளுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நாம் விட்டு விட்டால் அது பிற்காலத்தில் இந்தியாவிற்கு ஆபத்தாக முடிந்து விடும். இதனால் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை குறைந்த அளவு மட்டுமே உயர்ந்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








