நாடாளுமன்றத்துக்கு புதுமையான காரில் வந்த மத்திய அமைச்சர்... இன்னைக்கி நாடே இதை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்திற்கு வந்த கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை நோக்கி, தற்போது பயணித்து வருகிறது. வழக்கமான பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் புகழை இழக்க தொடங்கியுள்ளன. மறுபக்கம் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

இந்தியாவை பொறுத்த வரையில், மத்திய அரசும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களைதான் விரும்புகிறது. குறிப்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி (Nitin Gadkari), மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் தொடர்பாக மிக நீண்ட காலமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும், மக்கள் அவற்றை அதிகளவில் வாங்க வேண்டும் என்பது அமைச்சர் நிதின் கட்காரியின் நீண்ட கால வலியுறுத்தலாக இருந்து வருகிறது. அவரின் முயற்சிகளுக்கு தற்போது நல்ல பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆம், இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களும், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் மிக அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. வரும் நாட்களில் இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெறும் பேச்சுடன் நின்று விடாமல், மற்றவர்களுக்கு எல்லாம் முன் மாதிரியான காரியங்களையும் அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த வரிசையில் அவரது தற்போதைய நடவடிக்கை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்திற்கு இன்று (மார்ச் 30) வித்தியாசமான ஒரு காரில் வந்தார். டொயோட்டா மிராய் (Toyota Mirai), காரில் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த காரில் அப்படி என்ன விசேஷம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. இது ஹைட்ரஜன் கார் (Hydrogen Car) ஆகும். இதன் காரணமாகதான் அனைவரது கவனத்தையும் டொயோட்டா மிராய் கவர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் மிராய் காரை அறிமுகப்படுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா மிராய் கார்தான், இந்தியாவின் முதல் முழு ஹைட்ரஜன் எலெக்ட்ரிக் வாகனம் (India's First All-hydrogen Electric Vehicle) ஆகும். இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஆட்டோமேட்டிவ் டெக்னாலஜி (International Center For Automotive Technology - ICAT) உடனான தங்களது நிறுவனத்தின் சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாக மிராய் காரை டொயோட்டா இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது உலகில் உள்ள ஒரு சில ஹைட்ரஜன் எஃப்சிஇவி (Fuel Cell Electric Vehicle - FCEV) கார்களில் ஒன்றாகும். ஹைட்ரஜனால் உருவாக்கப்படும் மின்சாரம் மூலமாக இந்த கார் இயங்குகிறது. டொயோட்டா மிராய் காரை பயன்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி அவர் நாடாளுமன்றத்திற்கு தற்போது அந்த காரில் வந்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் காருக்கு தேவையான ஹைட்ரஜனை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL - Indian Oil Corporation Limited) சப்ளை செய்கிறது. டொயோட்டா மிராய் கார் சர்வதேச அளவில் கடந்த 2021ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டொயோட்டா மிராய் காரின் டேங்க்கை ஒரு முறை நிரப்பினால், 646 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். 646 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் ( Range) என்பது சிறப்பான விஷயமாக இருக்கும். எரிபொருள் நிரப்புவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது கூடுதல் சிறப்பு. எனவே எரிபொருள் தீர்ந்து விட்டாலும், உடனடியாக மீண்டும் எரிபொருள் நிரப்பி கொண்டு புறப்பட்டு விடலாம். நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வரும்காலங்களில் இதுபோன்ற கார்கள் இந்தியாவில் வெகுவாக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








