பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என எதுவுமே தேவையில்ல... ஒன்றிய அமைச்சர் வாங்கிய வித்தியாசமான கார்!
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி மிகவும் வித்தியாசமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மாற்று எரிபொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை குறையும் என்பது அவரின் திட்டம்.

இந்த சூழலில் அமைச்சர் நிதின் கட்காரி தற்போது ஒரு படி மேலே சென்றுள்ளார். அவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி மூலம் இயங்காது. அதற்கு பதிலாக ஹைட்ரஜன் (Hydrogen) மூலமாக இயங்கும். ''கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை உருவாக்குவது'' தொடர்பாக அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் பேசியிருந்தார்.

மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் ஆகிய வாகனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து நிதின் கட்காரி தற்போது கூறுகையில், ''பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் பசுமை ஹைட்ரஜன் மூலம் இயக்கப்பட வேண்டும் என்ற திட்டம் எனக்கு உள்ளது.

இதனை கழிவு நீர் மற்றும் திட கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கலாம். கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை உருவாக்க நான் முயற்சி செய்து வருகிறேன்'' என்றார். இதற்கிடையே புதிதாக வாங்கியுள்ள ஹைட்ரஜன் காரை டெல்லியில் பயன்படுத்த போவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கார்களை ஹைட்ரஜன் மூலமும் கூட இயக்க முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் விதைப்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''ஹைட்ரஜன் மூலம் இயங்க கூடிய பைலட் ப்ராஜெக்ட் (Pilot Project) கார் ஒன்றை நான் வாங்கியுள்ளேன்.

இது ஃபரிதாபாத்தில் உள்ள ஆயில் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த காரில் நான் வலம் வர போகிறேன்'' என்றார். இதற்கிடையே தற்போதைய நிலையில் இந்தியா பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்காக ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது.

இந்தியா தொடர்ந்து வழக்கமான எரிபொருட்களையே நம்பி கொண்டிருந்தால், இது அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இவ்வளவு அதிகமான தொகை செலவாகும் என்பதால்தான், மாற்று எரிபொருட்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை குறைக்கலாம் என்பதுடன், காற்று மாசுபாடு பிரச்னையையும் கட்டுப்படுத்தலாம். இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நிலைமை கையை மீறி சென்றுள்ளது.

இந்த பிரச்னையை குறைக்க வேண்டுமென்றாலும், வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒதுக்கி விட்டு, எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மக்கள் மாறுவது அவசியம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவில் ஒரு கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை காண்பது என்பது மிகவும் அரிதான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை சாலையில் பார்க்க முடிகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் கார்கள் அதிகளவில் வலம் வருகின்றன. இந்த நிலைமை வரும் காலங்களில் இன்னும் உத்வேகம் பெறும்.

அப்போது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை காண்பது என்பது மிகவும் அரிதான விஷயமாக மாறி விடக்கூடும். இப்படி ஒரு நாள் நிச்சயம் வரும் என்பது உறுதி. அந்த நாள் வெகு தொலைவிலும் இல்லை. அடுத்த பத்தாண்டுகளில் இது நடந்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. அரசின் நடவடிக்கைகளும், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வும் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








