லட்சம் டன் கணக்கில் லித்தியம் கிடைச்சுருக்கு... இந்த விஷயத்தில் இந்தியா நம்பர்.01ஆ வரும் - மத்திய அமைச்சர்!!
மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எலக்ட்ரிக் வாகனங்கள் தான் அடுத்து நம் எதிர்காலம் என்பதிலும், அதில் உலகளவில் இந்தியா தான் சிறந்து விளங்கும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளார் என்பது அவரது சமீபத்திய பேட்டியில் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் எதிர்காலத்தில் இல்லாமல் போக போகிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அந்த சூழலை விரைவாக கொண்டுவர என்ன செய்ய வேண்டுமா அதற்கான வேலைகள் அனைத்தையும் மத்திய அரசு பார்த்து வருகிறது. அத்தகைய வேலைகளுள் ஒன்றாக 2019ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஃபேம்-2 மானிய திட்டத்தில் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் மானியத்தை பெற்றுள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த வாகனங்களில் குறைந்தது 30 சதவீதமாவது எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற கொள்கையுடன் நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மற்ற பொருளதார வளர்ந்த நாடுகள் 2030க்குள் இதனை காட்டிலும் அதிக சதவீதத்தை எலக்ட்ரிக் வாகனங்களில் பெற்றுவிடும் என்றாலும், இந்தியா மிக பெரிய எலக்ட்ரிக் வாகன சந்தையாக உருவெடுக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனை சமீபத்திய பேட்டியில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவில் வடக்கு பகுதியில் ஜம்மூ & காஷ்மீரில் லித்தியம்-இரும்பு இருப்பது சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து மேலும் பேசுகையில், "ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1,200 டன்களுக்கும் அதிகமான லித்தியத்தை இறக்குமதி செய்து வருகிறோம்.

தற்போது ஜம்மு & காஷ்மீரில் லித்தியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த லித்தியம் இரும்பை நம்மால் பயன்படுத்த முடியும், நாம் தான் நம்பர்.01 ஆட்டோமொபைல் உற்பத்தி நாடாக மாற போகிறோம்" என்றார். இந்தியா சமீபத்தில்தான் வாகன விற்பனையில் ஜப்பான் நாட்டை முந்தி உலகளவில் 3வது இடத்திற்கு வந்தது. நமக்கு முன்னால் தற்போது சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் மட்டுமே உள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மதிப்பு தற்சமயம் 7.5 லட்ச கோடி அமெரிக்க டாலர்கள் (இந்தியா ரூபாய் மதிப்பில் 6 கோடியே கோடி ரூபாய்க்கும் அதிகம்) ஆகும். ஜம்மு & காஷ்மீரில் 59 இலட்ச டன் லித்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இதன் மூலமாக இந்தியா எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாக பூஜ்ஜிய மாசு உமிழ்வு போக்குவரத்தை எட்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டு இருப்பது உயர் தரத்திலான லித்தியம் எனவும் கூறப்படுகிறது.

நமது அண்டை நாடும், உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் விளங்கிவரும் சீனாவில் எலக்ட்ரிக் வாகன சந்தை ஏற்கனவே முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. சந்தையில் இடையே இடையே இருக்கும் சிறு சிறு இடங்களை கூட ஆக்கிரமிக்க உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் சண்டை போட்டு வருகின்றன. ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இந்தியாவிற்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
அனைத்து நாடுகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றாலும், இந்தியா எதிர்காலத்தில் இவி உற்பத்தி மையமாக விளங்கும் என்பதை அமைச்சர் நிதின் கட்கரியை போன்று நாமும் நம்பலாம். ஏனெனில் முதலாவதாக, நம் நாடு உலகளவில் மக்கள் தொகை கொண்ட நாடு. எதிர்காலத்தில் இது வளர்ந்து கொண்டுதான் போகுமே தவிர்த்து, குறையாது. மற்றொரு காரணம், 59 இலட்ச டன் லித்தியம் நம் நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டு இருப்பது ஆகும்.


Click it and Unblock the Notifications