அபராதம் விதிப்பது துரதிருஷ்டவசமானது... வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க நிதின் கட்கரி ஆர்வம்...
வாகனங்களின் வேக வரம்பை அதிகரிப்பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வமாக உள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிப்பதற்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மல்டி-லேன் சாலைகளில், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது துரதிருஷ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ''இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் நான் ஆலோசனை செய்துள்ளேன். எக்ஸ்பிரஸ்வே சாலைகள், பசுமை நெடுஞ்சாலைகள் உள்பட புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளை கருத்தில் கொண்டு நாம் நமது வேக விதிமுறைகளை திருத்தியமைக்க வேண்டும்'' என்றார்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லலாம் என மத்திய அரசு வேக வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. இதுவே எக்ஸ்பிரஸ்வே சாலைகள் என்றால், மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லலாம் என மத்திய அரசால் வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கீழ் வரும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில், வேக வரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில காவல் துறைகளுக்கு உள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட பகுதிகளில் வேக வரம்பு மாறுபடுவதற்கு இதுவே முக்கியமான காரணம்.

இதற்கிடையே இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.51 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் அதிகமான நபர்கள் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொள்ளும்போது, இந்த விஷயத்தில் இந்தியா பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

எனவே சாலை கட்டுமானம், டிசைன், விதிகளை அமல் செய்வது ஆகிய விஷயங்கள் தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதவிர வாகனங்களை, பயணிகளுக்கு பாதுகாப்பானதாக மாற்ற வேண்டியதும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில், ''பட்ஜெட் வாகனம் அல்லது சொகுசு வாகனம் என எந்த மாடல் என்றாலும், வாகன பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் இருக்க கூடாது என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். பாதுகாப்பு உபகரணங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, மனித உயிர் மிகவும் முக்கியமானது'' என்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபடி, இந்தியாவில் வாகனங்கள் தற்போது உண்மையிலேயே பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏபிஎஸ், ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக இடம்பெறுவதை மத்திய அரசு படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








