கொரோனா வைரஸை தில்லாக எதிர்க்கும் இந்தியா... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கிறது மத்திய அரசு...
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு, மத்திய அரசு புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கவுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணம். எனவே வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்காக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவார்கள் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு, மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது.

மோசமான சாலைகள்தான் அந்த மற்றொரு காரணம். எனவே தரமான சாலைகளை அமைப்பதிலும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதுடன், நாட்டின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது (NHAI) கடந்த 2019-20ம் நிதியாண்டில், 3,979 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. இதற்கு முன்பாக வேறு எந்த நிதியாண்டிலும், இவ்வளவு தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில்லை. எனவே இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

அதற்கு முன்பு கடந்த 2018-19ம் நிதியாண்டில், 3,380 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேசிய நெடுங்சாலைகளை அமைக்கும் பணிகள் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் தெளிவாக காட்டுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழலில், ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான இலக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார். இந்த தகவலை அவர் கடந்த செவ்வாய்கிழமை கூறினார்.

கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டு எடுப்பதை உறுதி செய்வதற்காக, தேசிய நெடுஞ்சாலை பணிகளை வேகப்படுத்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமெனில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியாக வேண்டிய தேவை இருப்பதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது குறித்து நிதின் கட்கரி கூறுகையில், ''முன்பு ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர்களுக்கு நெடுஞ்சாலைகளை அமைப்பது என இலக்கு வைத்திருந்தேன். நாம் அந்த இலக்கை அடைந்து விட்டோம். அந்த இலக்கை ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர்கள் என எடுத்து செல்வது தொடர்பாக தற்போது நான் யோசித்து வருகிறேன்'' என்றார்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இது தூண்டுகோலாக அமையும். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ், மனித உயிர்களை பறித்து வருவதுடன், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்திலும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








