நல்ல மனுஷன்யா! நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வெளுத்து கட்டிய ஒன்றிய அமைச்சர்! எதுக்குனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளை, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் வகையில் வேகம் ஏற்பட வேண்டும் என விரும்புவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தற்போது தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தாமதம் மற்றும் முடிவுகளை எடுப்பதில் உள்ள தயக்கம் ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றம் ஏற்படுவது மிகவும் முக்கியமானது. கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கூட நாம் ஒரு நாளைக்கு 38 கிலோ மீட்டர் சாலைகளை அமைத்துள்ளோம்.

இதன் மூலம் நாம் உலக சாதனை படைத்துள்ளோம். ஆனால் தற்போதைய செயல்பாடு எனக்கு திருப்தியை அளிக்கவில்லை. ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் வரை தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதுதான் எனது இலக்கு. இந்த இலக்கை அடைய வேண்டும்'' என்றார். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை வேகமாக கட்டமைப்பதில் ஒன்றிய அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்ததை போல், எந்தவொரு நாடு என்றாலும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் வலுவாக இருந்தால்தான் வேகமாக வளர்ச்சியடைய முடியும். விரைவான போக்குவரத்திற்கு தரமான சாலைகள் மிகவும் முக்கியம். எனவேதான் இந்தியாவில் சாலைகளை தரமாக கட்டமைப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள், அதாவது வரும் 2024ம் ஆண்டிற்குள், அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையான தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவிலும் இருக்கும் என அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயம்.

தரமான தேசிய நெடுஞ்சாலைகளின் மூலம் நமது வாகன பயணங்கள் இன்னும் சுலபமாகவும், வேகமாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் சரக்கு போக்குவரத்திற்கும் இந்த நெடுஞ்சாலைகள் உதவி செய்யும். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி எப்போதும் வெளிப்படையாக பேச கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த வகையில், திட்ட பணிகளை தாமதப்படுத்துவதாலும், வேலையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாலும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (National Highways Authority of India - NHAI) அதிகாரிகளை, அமைச்சர் நிதின் கட்காரி தற்போது மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வெளிப்படையான பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''யாரேனும் ஒருவர் (ஒப்பந்ததாரர்), தனது வங்கி அல்லது நிதி நிறுவனத்தை மாற்ற விரும்பினால், இதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற 3 மாதங்கள் முதல் 1.5 வருடம் வரை ஆகிறது. நாம் இதனை வெறும் 2 மணி நேரத்தில் சாத்தியப்படுத்தலாம்.

பிறகு ஏன் 1.5 வருடங்களுக்கு தாமதம் ஏற்படுகிறது? அதிகாரிகளிடம் நான் இந்த கேள்வியை கேட்கிறேன்'' என்றார். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்தி வரும் அதே நேரத்தில், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் அமைச்சர் நிதின் கட்காரி ஊக்குவித்து வருகிறார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம், இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மிக கடுமையாக மாசடைகிறது.

இந்த இரண்டு பிரச்னைகளையும் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மூலமாக குறைக்க முடியும். எனவே ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








