இதுக்காக தானே இவ்வளவு நாளா வெயிட் பண்ணோம்! தலைவலியாக இருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய ரயில்வே நிர்வாகம்!
இந்திய ரயில்வே நிர்வாகம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள யூடிஎஸ் ஆப-ல் உள்ள ஜியோ பென்சிங் என்ற முக்கியமான கட்டுப்பாடுகளை நீக்கி, இனி எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறையை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பயணிகள் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்த அப்டேட் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில்கள் என்பது போக்குவரத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருப்போம். நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் ரயில்களையே அதிகம் விரும்புகிறார்கள். இப்படியாக ரயில்களில் பயணிக்க முன்பதிவு உள்ள பெட்டிகள் அதிகம் இருக்கின்றன. இருந்தாலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளும் ரயில்களில் இணைக்கப்படுகிறது.

முன்பதிவு உள்ள பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். அதே நேரம் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்களை பெறுவதற்காக யூடிஎஸ் என்ற ஆப் ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
அதன்படி பயணிகள் இந்த ஆப்பை பயன்படுத்தி தங்கள் செல்போனிலேயே முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இதில் ரயில்வே நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. முக்கியமாக இந்த டிக்கெட்டுகளை ஒரு பயணி எடுக்க வேண்டும் என்றால் அவர் ரயில் நிலையத்திலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தூரத்திலும் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் இருந்தால் மட்டுமே இந்த டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இந்த கட்டுப்பாடு பயணிகளுக்கு மிகப்பெரிய அவதியாக இருந்து வந்தது. ரயில் நிலையத்திற்குள் வந்து அங்கு டிக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் சிக்கி இருந்தால் அவர்கள் இந்த ஆப் மூலம் டிக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இந்த ஆப்-ல் இருந்த கட்டுப்பாடுகளை தற்போது நீக்கி உள்ளது.
அதன்படி இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட்களை இந்த ஆப் மூலம் புக் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை தெரிவித்துள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாட்டின்படி 50 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள ரயில் நிலையங்களுக்கான டிக்கெட்டை இந்த ஆப் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் டிக்கெட்டுகளில் 25 சதவீதமான டிக்கெட் இப்படியான யூடிஎஸ் ஆப் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு யுடிஎஸ் ஆப் மூலம் எடுக்கப்படும் டிக்கெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் நீங்கள் அவசர அவசரமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் போது கவுண்டரில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதிலாக நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து உங்கள் செல்போன் மூலம் இந்த யுடிஎஸ் ஆப்பை பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடிஎஸ் ஆப் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்களுக்கான கட்டணத்தையும் ஆப் மூலமே செலுத்திக் கொள்ள முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவதால் உடனடியாக பேப்பர் இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியும் இந்த டிக்கெட்டுகளை வைத்து நீங்கள் செல்போனில் காண்பித்து பயணம் செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆப்பின் ஆப்ஷன்களை எல்லாம் பயணிகளுக்கு சுலபமாக இருக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐஆர்சிடிசி தளம் மூலம் இயங்கும் ஆப் மற்றும் இணையதளம் மிகச் சிறப்பாக அப்டேட் செய்யப்பட்டு பயணிகளுக்கு தக்கவாறு தனது சேவைகளை வழங்கிவரும் நிலையில் இந்த யூடிஎஸ் ஆப்-ல் இருக்கும் ஜியோ பென்சிங் ஆப்ஷன் மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. தற்போது அந்த தலைவலி நீக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









