தல எப்பவுமே கெத்துதான்... குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த அஜீத்
குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை தல அஜீத் சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தல அஜீத், உண்மையில் ஒரு பந்தய வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனால் அவரது திரைப்படங்களில், பைக் சேஸிங் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சமே இருக்காது. இதற்காகவே அஜீத்தை நேசிக்க கூடியவர்கள் பலரும் இருக்கின்றனர்.

திரைப்படங்கள் தவிர்த்து, உண்மையான வாழ்க்கையிலும் மோட்டார்சைக்கிள்களில் லாங் டிரிப் அடிப்பது அஜீத்தின் விருப்பமான செயல்பாடுகளில் ஒன்று. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் சமீபத்தில் கூட நடைபெற்றது. தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது.

அங்கு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தல அஜீத் சென்னை திரும்புவதற்கு விமான டிக்கெட் தயாராக இருந்தது. எனினும் விமான டிக்கெட்டை ரத்து செய்யும்படி கூறிய தல அஜீத், அங்கிருந்து சென்னைக்கு ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றில் சீறிப்பாய்ந்து வந்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

எனினும் அஜீத்தின் பைக் பயணம் பற்றியும், அந்த பயணத்தின்போது அவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் குறித்தும் தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இச்சம்பவம் சமீபத்தில் நடைபெறவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அஜீத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தல அஜீத் பிறந்தநாள் கொண்டாடினோரோ இல்லையோ, சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் அஜீத்தின் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்து விட்டனர். சமூக வலை தளங்களில், அன்றைய தினம் முழுக்க அஜீத்தின் புகைப்படங்களும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பதிவுகளும் நிரம்பி வழிந்தன.

ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்கள் பலரும் அஜீத்திற்கு வாழ்த்து கூறினர். அத்துடன் அஜீத்தை பற்றிய பழைய நினைவுகள் சிலவற்றையும் சமூக வலை தளங்களில் அசைபோட்டனர். இதில், சுஹைல் சந்தோக்கும் (Suhail Chandok) ஒருவர். நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என சுஹைல் சந்தோக்கிற்கு பல்வேறு முகங்கள் உள்ளன.

வீரம் படத்தில் இவர் அஜீத்தின் சகோதரராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் பிறந்தநாளை ஒட்டி, சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். இதன்படி அஜீத்தும், சுஹைல் சந்தோக்கும் ஒரு முறை பைக்கில் லாங் டிரிப் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிரிப்பின்போது டீ குடிப்பதற்காக அவர்கள் பைக்கை ஓரங்கட்டி நிறுத்தியுள்ளனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் உள்ள குடிசையில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் குடிசைக்கு வந்து டீ குடிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதன்பேரில் அஜீத்தும் சென்றுள்ளார். அப்போது அஜீத்துடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அஜீத்திடம் கேட்பதற்கு அவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர்.

இதை புரிந்து கொண்ட தல அஜீத், அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டார். அத்துடன் அதனை பிரிண்ட் செய்து அவர்களுக்கு அனுப்பியும் வைத்துள்ளார். சுஹைல் சந்தோக்கின் டிவிட்டர் பதிவு மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2013ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அஜீத் நல்ல மனிதர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதற்கு உதாரணமாக இதற்கு முன்பு பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், இந்த நிகழ்வும் ஒன்று. அஜீத் தனது திரைப்படங்களின் மூலமாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இதற்கு போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறுவதே காரணம். இதனால் அஜீத் தன் படங்களில், ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த விஷயத்திலும் கூட தல கெத்துதான். அஜீத் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது, அவரது ரசிகர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடும்.


Click it and Unblock the Notifications








