அபராதம் விதித்த போலீசாரை பழிக்கு பழி வாங்கிய எலெக்ட்ரீசியன்... மிரட்டலான செயலை அசால்ட்டாக செய்தார்!!
ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காக அபராதம் விதித்த போலீசாரை எலெக்ட்ரீசியன் ஒருவர் பழிக்கு பழி வாங்கியுள்ளார். அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் மிரண்டு விடுவீர்கள்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலானோர் இதனை கடைபிடிப்பது கிடையாது.

ஆனால் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படிதான் உத்தரபிரதேச மாநிலம் பைரோசாபாத் மாவட்டத்தை சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஸ்ரீனிவாஸ் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் இதன் எதிரொலியாக நடந்த சம்பவங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இது குறித்து எலெக்ட்ரீசியன் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ''பழுது ஒன்றை சரி செய்து விட்டு மோட்டார்சைக்கிளில் நான் திரும்பி கொண்டிருந்தேன். வழியில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திரா என்னை நிறுத்தினார். பின்னர் எனக்கு அவர் 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

நான் ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே நான் எனது ஜூனியர் இன்ஜினியருக்கு போன் செய்து, அவருடன் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திராவை பேச வைத்தேன். என்னை மன்னித்து விடும்படி, என் சார்பில் ஜூனியர் இன்ஜினியர் கேட்டு கொண்டார். இருந்தபோதும் சப்-இன்ஸ்பெக்டர் அதனை காது கொடுத்து கேட்கவே இல்லை.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திரா மற்றும் அவருடன் இருந்த போலீசார் எனக்கு விளக்கினர். எனவே மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறினால், அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் விதிமுறைகள் குறித்து நான் அவர்களுக்கு விளக்கினேன்.

ஆம், லைன்பர் போலீஸ் ஸ்டேஷன் 6.62 லட்ச ரூபாய் மின்சார கட்டணத்தை பாக்கி வைத்துள்ளது. எனவே போலீஸ் ஸ்டேஷனுக்கான மின்சார இணைப்பை நான் துண்டித்து விட்டேன்'' என்றார். ஆம், ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததற்காக, போலீஸ் ஸ்டேஷனின் மின் இணைப்பை துண்டித்து அதிரடி காட்டியுள்ளார் எலெக்ட்ரீஷியன் ஸ்ரீனிவாஸ்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பைரோசாபாத் மாவட்ட டிவிவிஎன்எல் (DVVNL) எலெக்ட்ரிக்சிட்டி போர்டு சப்-டிவிஷனல் அதிகாரியான ரன்வீர் சிங் கூறுகையில், ''போலீஸ் ஸ்டேஷன் மின்சார கட்டணம் நிலுவையில் உள்ளது தொடர்பாக பலமுறை நினைவுபடுத்தி விட்டோம்.

இந்த சூழலில் லைன்பர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ள கட்டண பாக்கி தொடர்பாக நாங்கள் மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்தினோம். இதில், சுமார் 7 லட்ச ரூபாயை காவல் துறை செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்தது. 2016ம் ஆண்டில் இருந்து அவர்கள் ஒரு பைசாவை கூட செலுத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், எலெக்ட்ரீசியனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் சம்பந்தப்பட்ட எலெக்ட்ரீசியன் மற்றும் இதர ஊழியர்கள் கோபமடைந்தனர். அபராதம் விதிக்கப்பட்ட எலெக்ட்ரீசியன் கடந்த 4 மாதங்களாக சம்பளம் பெறவில்லை. எனவே 500 ரூபாய் அபராதம் செலுத்த முடியாத நிலையை அவர் எடுத்து கூறியுள்ளார்'' என்றார். முன்னதாக எலெக்ட்ரீசியன் ஸ்ரீனிவாஸ் சுமார் 4 மணி நேரத்திற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டார்.

இடைப்பட்ட நேரத்தில் மின் வினியோகம் இல்லாமல்தான் போலீஸ் ஸ்டேஷன் இருந்துள்ளது. ஆனால் காவல் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பைரோசாபாத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கான மின்சார கட்டணமாக ஏற்கனவே டிவிவிஎன்எல்-க்கு 1.15 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாக்கி உள்ள கட்டணமும் விரைவில் செலுத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''எலெக்ட்ரீசியனின் இந்த நடவடிக்கை தேவையற்றது. சுமார் நான்கு மணி நேரமாக போலீஸ் ஸ்டேஷனில் கரண்ட் இல்லை. எலெக்ட்ரீசியனின் இந்த செயல் தொடர்பாக டிவிவிஎன்எல்லின் உயர் அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டோம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய காவல் துறையை சேர்ந்த 70 பேருக்கே எங்கள் எஸ்பி மன்னிப்பு வழங்கவில்லை. அப்படி இருக்க நாங்கள் எப்படி எலெக்ட்ரீசியனை மன்னிக்க முடியும்?'' என்றனர். இந்த விஷயத்தில் எலெக்ட்ரீசியனின் செயல் சரியா? தவறா? அரசின் கீழ் செயல்படும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மின்சார கட்டணம் செலுத்தாதற்கு அங்கு பணியாற்றும் போலீசார் பொறுப்பாக முடியுமா? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

இதனிடையே தமிழகம் உள்பட அனைத்து இடங்களிலும் தற்போது போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியின் பலனாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








