கையடக்க கருவி மூலம் மோசடி... பெட்ரோல் நிலையங்களின் தில்லாலங்கடி வேலைகள்!
பெட்ரோல் நிலையங்களில் கையடக்கட்ட கருவி மூலமாக மோசடி செய்தது குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன.
சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சிறிய மின்னணு கருவி மூலமாக எரிபொருள் அளவில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த கருவியை பொருத்துவதன் மூலமாக லிட்டருக்கு 50 மில்லி வரை குறைவாக பெட்ரோல் நிரப்பப்படுவதும் அம்பலமானது. இந்த நிலையில், இந்த மோசடி குறித்து போலீசார் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம் பற்றிய தகவலும் இப்போது வெளியில் வந்துள்ளது. மோசடியில் சிக்கிய பெட்ரோல் நிலையங்களில் மூன்று பெட்ரோல் நிலையங்கள், அம்மாநில பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.என்.சுக்லாவிற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

தன்னுடைய பெட்ரோல் நிலையங்கள் மோசடியில் சிக்கியதாலேயே, போராட்டம் நடத்தப்போவதாக அவர் மறைமுகமாக அம்மாநில அரசுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி போராட்டம் நடத்த தூண்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ரெய்டு நடத்தியபோது நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதிரடி புலனாய்வு போலீசார் ரெய்டு நடத்தி வருவது குறித்து அறிந்து கொண்ட லக்ணோவில் உள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் தன்னுடைய பெட்ரோல் நிலையத்தை அவசரமாக மூடிவிட்டார்.

அத்துடன், புனரமைப்புப் பணிகள் நடப்பது போன்று, Under Renovation என்ற போர்டை மாட்டிவிட்டு தப்பித்துள்ளார். இதுபோன்று, மோசடியில் ஈடுபட்ட பல பெட்ரோல் நிலைய அதிபர்கள் செய்வதறியாது விதவிதமான வழிகளில் தப்பிக்க வழிகளை தேடி உள்ளனர்.

இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெட்ரோல் நிலைய மேலாளர் ஒருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதாம். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அல்லது அரசு அளவீட்டு அதிகாரிகள் அளவீட்டு சோதனை செய்யும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலமாக அந்த மின்னணு சாதனத்தை அணைத்து வைத்து விடுவார்களாம்.

இதனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இந்த தில்லுமுல்லு நடப்பதை கண்டறிய முடியாதபடி பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த கருவி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்த வலுவான ஆதாரம் மூலமாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 6,000 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 1,000 பெட்ரோல் நிலையங்களுக்கு மேல் இந்த கையடக்க மின்னணு கருவியை பயன்படுத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Picture credit: Bhaskar


Click it and Unblock the Notifications








