உபி முதல்வர் யோகி மீது இப்படியொரு பாசமா... அதற்காக இப்படியா செய்வது? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!!
நம் இந்திய மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை எந்த அளவிற்கு ஒழுக்கத்துடன் கடைப்பிடிக்கின்றனர் என்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். தினந்தோறும் சாலைகளில் பார்த்து கொண்டுதான் இருப்பீர்கள். நகரங்களில் வாழும் மக்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எவ்வாறு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர்.
அதாவது ஏற்கனவே பல வாகனங்களால் நெரிசல் மிகுந்து காணப்படும் பகுதியை தனது வாகனத்தை கொண்டு சென்று மேலும் நெரிசலுக்கு உள்ளாக்குகின்றனர். மறுப்பக்கம், சிறு சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்போர் வேறு விதமான வழிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர். இதில் முக்கியமானது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வாகனத்தை சட்டத்திற்கு புறம்பாக மாடிஃபை செய்து கொள்வது.

உதாரணத்திற்கு, மற்ற வாகனங்களில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக இரைச்சலான ஹார்ன் சத்தத்தை வைத்திருப்பதை கேட்டிருப்பீர்கள். அதேபோல் இத்தகைய பகுதிகளில் வசிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் விதிகளை மீறி வாகனத்தின் மீதும், நம்பர் பிளேட்டிலும் வாசகங்களை அதிகளவில் எழுதுகின்றனர். வாகனத்தின் மீது என்றால் கூட பரவாயில்லை, ஆனால் நம்பர் பிளேட் நிச்சயம் தெளிவாக புலப்படக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் ஒரு சிலர், வாகனத்தின் நம்பர் பிளேட்டில் தான் தங்களது கற்பனை திறன்களையும், மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் பாசத்தை வெளிக்காட்டுவர். அப்படியொரு நபரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். உத்திர பிரதேச மாநிலம், வாரணாசியை சேர்ந்த ஒருவர் தனது ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கின் நம்பர் பிளேட்டை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றியதற்காக பிடிப்பட்டுள்ளார். அத்துடன் நம்பர் பிளேட்டில் 'யோகி சேவாக்' என்றும் ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
யோகியின் சேவை என்பது இதன் தமிழ் அர்த்தம் ஆகும். உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மீது கொண்ட பற்றால் இந்த நபர் இவ்வாறு தனது பைக்கின் நம்பர் பிளேட்டில் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறோம். ஆனால் எப்படியிருந்தாலும் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் பதிவெண்களை தவிர்த்து வேறெந்த வார்த்தையை எழுதுவதும் சட்டப்படி குற்றமாகும். நம்பர் பிளேட்டை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றியிருப்பது அதைவிட பெரிய குற்றமாகும்.
இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எலக்ட்ரிக் 2-வீலராக இருப்பின் பச்சை நிறத்திலும், டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் சேவைக்கு பயன்படுத்தப்படும் 2-வீலராக இருப்பின் மஞ்சள் நிறத்திலும் நம்பர் பிளேட் பொருத்தப்படுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆர்டிஓ-வின் அனுமதியின் கீழ் செயல்படும். மற்றப்படி வாகனத்தின் உரிமையாளர் உள்பட வேறு எவராலோ அதனை மாற்ற இயலாது.
ஆரஞ்சு நிற நம்பர் பிளேட் உடன் பைக் ஒன்று செல்வதை கண்ட மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட வாரணாசி போலீஸார் சம்மந்தப்பட்ட நபருக்கு ரூ.6,000-ஐ அதிரடியாக அபராதமாக விதித்துள்ளனர். மேலும் இதனை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களிலும் வாரணாசி போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
'யோகி சேவாக்' என கூறினாலும், இத்தகைய வார்த்தைகளை வாகனங்களின் நம்பர் பிளேட்டில் குறிப்பிட யாருக்கும் அனுமதி இல்லை எனவும் அந்த சமூக வலைத்தள பதிவுகளில் வாரணாசி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்பின், வாரணாசியில் ஒரு போக்குவரத்து போலீஸாரிடம் அந்த நபர் தனது மோட்டார்சைக்கிள் உடன் நேரடியாக சிக்கியுள்ளார். அவரிடம், இந்த நம்பர் பிளேட்டை நீக்கி, சட்டத்திற்குட்பட்ட நம்பர் பிளேட்டை பொருத்துமாறு ஆணையிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








