இரண்டே கார்களை 14 பேரிடம் விற்ற இளைஞர்! எப்படி இது சாத்தியம்? மோசடி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி
தன்னுடைய மற்றும் தன் நண்பருடைய கார்களை வைத்து 14 பேரை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விநோதமான கார் விற்பனை மோசடி சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அதிர்ச்சயூட்டும் தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். உபி மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் இரண்டு கார்களை வைத்துக் கொண்டு 14 முறை ஓல்எக்ஸ் தளத்தின் வாயிலாக விற்பனைச் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக மிரள வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடி செய்த இளைஞரைத் தற்போது உபி காவல்துறைக் கைது செய்திருக்கின்றது. அவரை விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்களை மட்டுமே வைத்துக் கொண்டு எப்படி 14 முறை விற்க முடியும்?, இது சாத்தியமே இல்லை என, உங்களுக்கு பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விக்கும் எழும்பியிருக்கும். இதற்கான பதில்கள் கீழே உள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டாவில் உள்ள டிகிரி பகுதியைச் சேர்ந்தவர் மனோட்டம் தியாகி. இவர் தற்போது அம்ரோஹா எனும் பகுதியில் வசித்து வருகின்றார். இவரை, நண்பர்கள் மனு என்றே அழைக்கின்றனர். இவரே 14 பேரை தன்னுடைய கார் மற்றும் தன்னுடைய நண்பரின் காரை வைத்து மோசடி செய்தவர்.

இதற்காக, ஸ்விஃப்ட் டிசையர் (மனுவிற்கு சொந்தமானது) மற்றும் மொராதாபாத்தைச் சேர்ந்த தனது நண்பருக்குச் சொந்தமான வேகன்ஆர் உட்பட இரண்டு கார்களையே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இவற்றை வைத்தே குறைந்தது 14 முறை ஆன்லைன் வாயிலாக விளம்பரம் போட்டு விற்று வருமானம் ஈட்டியிருக்கின்றார். நீண்ட காலமாக இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இவர் தற்போது போலீஸிடம் சிக்கியிருக்கின்றார்.

ஓஎல்எக்ஸ் தளத்தில் தன்னை கார் விற்பனையாளராக காட்டிக் கொள்ளும் மனு, அவர்களிடம் உண்மையான விற்பனையாளராகவே காட்டிக் கொள்வார். பேரம் மற்றும் விற்பனையில் கரராக செயல்பட்டு நல்ல அமவுண்டிற்கு அக்கார்களைத் தள்ளி விடுவார். ஆனால், விற்பனைச் செய்வதற்கு முன்னர் அந்த காரில் ஜிபிஎஸ் கருவியை அவர் பொருத்துவிடுவார் என கூறப்படுகின்றது.

இதை வைத்தே கார் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, தன்னிடம் இருக்கும் மற்றுமொரு சாவியை வைத்து அக்காரை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தூக்கிவிடுவார். இதனை அறியாத புதிய உரிமையாளர் தன்னுடைய கார் களவு செய்யப்பட்டுவிட்டதாக போலீஸிடத்தில் புகார் அளிப்பர். ஆனால், போலீஸாராலும் இதனை அவ்வளவு கண்டுபிடிக்க முடியாது.

ஏனெனில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திய கையோடு காரில் போலியான பதிவெண்ணையும் அவர் பொருத்திவிடுவார். இதனை, காரை திருடி வந்ததன் பின்னர் அகற்றிவிட்டு, உண்மையான பதிவெண்ணுடன் வலம் வருவார். எனவேதான் அக்காரை இனம் காணுவது மிகக் கடினம் இருந்து வந்தது. இவ்வாறே பல நாட்கள் மனு 14 பேர் வரை ஏமாற்றியிருக்கின்றார்.

இவ்வாறே 15ம் நபரையும் ஏமாற்றும் நோக்கில் மீண்டும் ஓஎல்எக்ஸ்-இல் மாருதி வேகன்ஆர் காரை விற்பனைக்காக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் ஏற்கனவே காரை வாங்கி ஏமாந்த ஓர் நபரின் கண்களில் பட்டிருக்கின்றது. தன்னுடைய கார் ஓஎல்எக்ஸ்-இல் விற்பனைக்கு வந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அந்த நபர், போலீஸிடம் புகார் தெரிவித்திருக்கின்றார்.

இதனடிப்படையிலேயே மனுவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஓஎல்எக்ஸ்-இல் பொய்யாக விளம்பரம் செய்து காரை விற்பனைச் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இரு கார்களை வைத்து இதுவரை 14 பேரை ஏமாற்றியதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு முறையும் குறைந்தது ரூ. 2.7 லட்சம் வரையில் அவர் காரை விற்பனைச் செய்திருக்கின்றார்.

காரை விற்பனைச் செய்வதற்கும், அதை மீண்டும் திருடுவதற்கும் அவர் மேற்கொண்ட செயல் போலீஸாரை ஷாக்கடையச் செய்திருக்கின்றது. தற்போது, மனுவிடத்தில் இருந்து மாருதி வேகன்ஆர் கார், போலியான நம்பர் பிளேட், இரு ஸ்மார்ட்போன்கள், போலியான பேன் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இத்துடன், மனுவிடத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மனு ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை முயற்சி மற்றும் சீட்டிங் வழக்குகள் என ஒட்டுமொத்தமாக ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக கடந்த காலங்களைச் சிறையில் கழித்த மனு மிக சமீபத்திலேயே வெளியில் வந்துள்ளார்.

Source: TOI
சிறைவாசத்தை எண்ணி திருந்தி வாழாமல் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் மனு. எனவேதான் இந்த சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 14 பேரின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அவர்களின் பணம் மீண்டும் கிடைக்குமா என்ற தகவலும் தெரியவில்லை.
குறிப்பு: 1 முதல் 10 வரையிலான புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








