ஏழை தொழிலாளியின் உயிரை பறித்த கார்... கதவை தொறந்து பாத்தா உள்ள அவங்க! காப்பாத்த வந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகம்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் அபாயம் குறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, ஒரு சில வாகன ஓட்டிகள் மாறுவதாக இல்லை. எனவே அதிவேகம் காரணமாக தொடர்ச்சியாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இந்த வரிசையில் தற்போது நிகழ்ந்துள்ள பயங்கரமான சாலை விபத்து ஒன்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
மும்பை (Mumbai) நகரின் கண்டிவ்லி பகுதியில் பகுதியில் நேற்று முன் தினம் இரவு (டிசம்பர் 27) கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அது சிகப்பு நிற ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) கார் ஆகும். அதிவேகமாக வந்த காரணத்தால், திடீரென அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அங்கு மெட்ரோ ரயில் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 ஊழியர்கள் மீது, அந்த ஹூண்டாய் வெர்னா கார் மோதியது. இதில் ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலை விபத்தில் சிக்கிய காருக்கு உள்ளே இருந்தது ஊர்மிளா கோத்தாரி (Urmila Kothare) ஆவார். இவர் மிகவும் பிரபலமான மராத்தி நடிகை (Marathi Actress) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோதுதான், இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனால் சாலை விபத்து நிகழ்ந்த சமயத்தில் அவர் காரை ஓட்டவில்லை என கூறப்படுகிறது. அவரது டிரைவர்தான் காரை ஓட்டி வந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாலை விபத்து காரணமாக ஊர்மிளா கோத்தாரி மற்றும் அவரது கார் டிரைவர் ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதில், டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஊர்மிளா கோத்தாரிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்த காரணத்தால் ஊர்மிளா கோத்தாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் பிரபல நடிகை சம்பந்தப்பட்ட விபத்து என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை விபத்து நிகழ்ந்த உடனேயே, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக நிறைய பேர் அங்கு கூடியுள்ளனர். அப்போது காரின் கதவு திறக்கப்பட்டதும் உள்ளே ஊர்மிளா கோத்தாரி இருந்துள்ளார். இவர் மிகவும் பிரபலமான நடிகை என்பதால், அங்கு கூடியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சாலை விபத்து தொடர்பாக ஊர்மிளா கோத்தாரியின் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அபாயகரமான முறையில் காரை ஓட்டியது மற்றும் அலட்சியம் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களை அதிவேகத்தில் இயக்க கூடாது என்பதற்கு இச்சம்பவம் மற்றொரு உதாரணம். தவறாக எதுவும் நடந்து விடாது என்ற அலட்சியத்தால்தான் நிறைய பேர் வாகனங்களை அதிவேகமாக இயக்குகின்றனர். நீங்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்க கூடியவர் என்றால், இனி அந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








