இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்தது தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்திற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. எவ்வாறு இந்த விபத்து நடந்தது? இதில் ஏற்பட்ட சேதாரங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான மேரிலாந்தில் உள்ள பல்டிமோர் நகரத்தில் பெரிய சரக்கு கப்பல் மோதி இரும்பு மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் பெரிய பொருட்சேதங்கள் ஏற்பட்டு இருப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்டிமோர் நகரத்தில் படாப்ஸ்கோ என்ற ஆற்றின் மீது அமைக்கபட்டுள்ள இரும்பு மேம்பாலம் 'ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ' ஆகும். இதன் ஒரு பகுதி தான் தற்போது சரக்கு கப்பல் மோதி இடிந்துள்ளது. ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ மேம்பாலத்தின் மீது 4-வழி சாலை செல்கிறது. நீண்ட தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் இது என்பதால், பல்டிமோர் நகரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலைகளுள் இதுவும் ஒன்றாகும்.
இதனால்தான், இந்த கப்பல் விபத்து உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1:27 மணிக்கு நடைபெற்று இருப்பினும், பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சில கார்கள் ஆற்றினுள் விழுந்துள்ளன. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்திய சரக்கு கப்பலின் பெயர், டாலி ஆகும்.

பாலம் மீது மோதிய வேகத்தில் கப்பல் பாலத்துடன் சிக்கிக் கொண்டுள்ளது. கப்பல் மோதியது ஒரு பகுதியில் தான் என்றாலும், அந்த அதிர்வில் நீண்ட தூரத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுவதை விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவில் காணலாம். இதனால் ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ மேம்பாலத்தின் வலிமையின் மீது பலருக்கு சந்தேகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இந்த விபத்துக்கு தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள் யாரும் காரணமில்லை எனவும், இந்த விபத்துக்கு தொழிற்நுட்ப கோளாறே காரணம் எனவும் போலீஸார் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், டாலி சரக்கு கப்பலில் இரண்டு முறை விளக்குகள் முற்றிலுமாக அணைந்து பின் எரிந்துள்ளன.

இதில் இருந்து கப்பலுக்கு வரும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் கப்பலின் கண்ட்ரோலை கேப்டன் இழந்திருக்கலாம் எனவும் போலீஸார் தங்களது விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால், டாலி சரக்கு கப்பலை நிர்வகிக்கும் சினெர்ஜி மெரைன் க்ரூப், "இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என தெரிவித்துள்ளது.
பாலத்துடன் மோதுவதற்கு முன்னதாக, கப்பலில் இருந்த மாலுமிகளிடம் இருந்து ஆபத்தை உணர்த்து வகையில் 'மே டே' சிக்னல் வந்ததாக மேரிலாந்து கவர்னர் வெஸ் மூரே தெரிவித்துள்ளார். படாப்ஸ்கோ ஆற்றில் இருந்து 185 அடி உயரத்தில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ மேம்பாலம் 1977ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க தேசிய கீதத்தை எழுதியவரான ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ நினைவாக இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் நிறைய துறைமுகங்கள் உள்ளன. இன்னும் சொல்ல போனால், துறைமுக பகுதிகளுக்கு பெரிய, பெரிய கப்பல்கள் வந்து செல்லவே படாப்ஸ்கோ ஆறு முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட பரபரப்பான கப்பல் வழித்தடத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications









