நேரில் பார்ப்பதற்கு கொடுத்து வெச்சிருக்கணும்!! அமெரிக்க அதிபரின் கார் டெல்லியில்... எதற்காக தெரியுமா?
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு, அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பாதுகாப்பான வாகனங்கள் அவசியமாகின்றன. பரவலாக விற்கப்படும் வாகனங்களும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால், அவையும் பாதுகாப்பானவையே. ஆனால், விஐபிகள் தங்களது பாதுகாப்பை கருதில் கொண்டு, கூடுதலாக செலவு செய்து, பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
அப்படி இருக்கையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார் எந்த அளவிற்கு பாதுகாப்பு மிக்கதாக இருக்கும்? என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் பயன்படுத்தும் காரை இந்தியாவில் காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கு விரைவில் அமெரிக்க அதிபர் வருகை தர உள்ளார்.

நம் தேசிய தலைநகர் புதுடெல்லியில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். ஜோ பைடன் மட்டுமின்றி, இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்களும் பொதுவாகவே வெளிநாடுகளுக்கு செல்லும்போது தங்களது முக்கியமான வாகனங்களையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்வர்.
இந்த வகையில், ஜோ பைடன் இந்தியாவிலும் அவரது 'தி பீஸ்ட்' எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்த உள்ளார். ஜி20 உச்சி மாநாடு துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜோ பைடனின் தி பீஸ்ட் வாகனம் இந்தியாவிற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்டு உள்ளது.
பாதுகாப்பான மற்றும் வலிமையான கார்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற காடில்லாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லிமௌசைன் பாடி ஸ்டைல் காரான இது அதன் இணையற்ற பாதுகாப்பு வசதிகளினால் பிரபலமானதாக விளங்குகிறது. இதற்காக, இராணுவ தரத்திலான கவசம், புல்லட் ப்ரூஃப் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கண்ணீர் புகை வெடிக்குண்டுகளை தடுக்கக்கூடிய தடுப்பு திறன் உள்ளிட்டவை அமெரிக்க அதிபரின் காடில்லாக் காரில் இடம்பெறுகின்றன.

இதன் மூலமாக, உலகிலேயே தற்சமயம் மிகவும் பாதுகாப்பான வாகனமாக ஜோ பைடனின் 'தி பீஸ்ட்' விளங்குகிறது. இந்த காரின் வெளிப்பக்கம் முழுவதும் கிட்டத்தட்ட 5 இன்ச்கள் தடிமனத்திற்கு இராணுவ தரத்திலான கவசத்தால் மூடப்பட்டுள்ளது. அதுவே கதவுகளுக்கு சுமார் 8 இன்ச்கள் தடிமனான கவசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தி பீஸ்ட் காரின் எடை மிக அதிகம் ஆகும். எந்த அளவிற்கு என்றால், அளவில்-பெரிய போயிங் 757 விமானத்த்தின் கேபின் கதவின் எடைக்கு இணையானது இந்த கார் ஆகும்.
அமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் காரின் கதவுகள் ஒருமுறை மூடிக் கொண்டால், ஒரு விதமான இறுக்கமான காற்று சீலை உருவாக்கிக் கொள்கின்றன. இது, கெமிக்கல் தாக்குதல்களில் இருந்தும் காரின் கேபினை பாதுகாக்கும். இதற்கு இணையாக, காரின் ஜன்னல் 5 லேயர்களினாலான கண்ணாடி மற்றும் பாலிகார்போனேட் ஆல் உருவாக்கப்பட்டு உள்ளன. கெம்மிக்கல் தாக்குதல்களையே இவற்றால் சமாளிக்க முடியும் எனும்போது, துப்பாக்கி புல்லட்களை தடுப்பது பெரிய விஷயமாக இருக்காது.
வெடிக்குண்டு தாக்குதல்களை கூட ஜோ பைடனின் தி பீஸ்ட் காரால் சேதாரமின்றி சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இதற்கேற்ப சேசிஸ் மிக வலிமையானதாகவும், கூடுதல் இரும்பு பிளேட்களுடனும் வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டு உள்ளது. தி பீஸ்ட் காரில் சேதமடையக்கூடிய ஒரே வெளிப்புற பாகம் என்றால், அது காரின் டயர்கள் தான். ஆனால், கிழிந்த டயர்கள் உடனும் கூட இயங்கக்கூடியது தி பீஸ்ட் ஆகும்.
அளவில் பெரியதாக இருப்பினும், தி பீஸ்ட் வாகனத்தில் சவுகரியமாக 4 பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். காருக்குள் ஜன்னல்களால் தனி அறையை ஒரு ஸ்விட்ச் மூலமாக உருவாக்கி கொள்ள முடியுமாம். இந்த ஸ்விட்ச் கண்ட்ரோலை அதிபர் மட்டுமே கொண்டிருப்பார் என கூறப்படுகிறது. காருக்குள் தீ ஏற்பட்டால், அதனை அணைக்க தீயணைப்பு அமைப்பும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் பெரும் பொருளாதார நாடான அமெரிக்காவின் அதிபர் பயன்படுத்தும் காரில் இந்த அளவிற்கு கூட பாதுகாப்பு அம்சங்கள் இல்லையென்றால் தான் ஆச்சரியம். இத்தகைய சிறப்புமிக்க 'தி பீஸ்ட்' வாகனம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு இருப்பது அதனை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications