இதுக்கு மாருதி எவ்வளவோ பரவால... 40 லட்ச ரூபாய் காரை வாங்கிய 2 மணி நேரத்தில் ஓனர் நொந்து போய்ட்டாரு
சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய 2 மணி நேரத்தில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு சரி நிகராக, வேறு எந்த நிறுவனத்தாலும் தற்போதைய நிலையில் போட்டி மாடல்களை உருவாக்க முடியவில்லை. எனவே உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா கார்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

ஆனால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை. என்றாலும் கூடிய விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவில் உள்ள டெஸ்லா கார் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த டெஸ்லா நிறுவனம் தற்போது தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

புத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) காரின் மேற்கூரை, நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது தானாக பறந்து சென்றுள்ளது. அதுவும் காரை வாங்கிய 2 மணி நேரத்திற்கு உள்ளாக, இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாதானியல் என்பவர்தான் இந்த மோசமான அனுபவத்தை தற்போது பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டப்லின் நகரில் செயல்பட்டு வரும் ஒரு டீலர்ஷிப்பில், தனது புத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் காரை டெலிவரி எடுப்பதற்காக தனது பெற்றோருடன் நாதானியல் சமீபத்தில் சென்றார். காரை டெலிவரி எடுத்த பின்னர் திரும்பி வரும்போது, அந்த காரின் பனரோமிக் கண்ணாடி மேற்கூரை தானாக காற்றில் பறந்து சென்றது.

இந்த சம்பவத்தை நாதானியல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேற்கூரை இல்லாத காரின் சிறு காணொளியை வெளியிட்டுள்ள அவர் அத்துடன், ''டெஸ்லா நிறுவனம் கன்வெர்டபிள் கார்களை விற்பனை செய்கிறது என ஏன் எங்களிடம் கூறவில்லை?'' என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் எங்களின் புத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் காரின் மேற்கூரை நெடுஞ்சாலையில் விழுந்து விட்டது எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக நாதானியலின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றம் அடைந்து விட்டனர். அதன்பின் காரை ஒப்படைப்பதற்காக மீண்டும் டீலர்ஷிப்பிற்கே திரும்பி சென்றுள்ளனர்.

டெஸ்லா மாடல் ஒய் காரின் மேற்கூரை பழுதாக இருந்திருக்கலாம் அல்லது தொழிற்சாலையில் அதனை சரியாக பொருத்த மறந்திருக்கலாம் என டீலர்ஷிப் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த காரை இலவசமாக சரி செய்து தருவதற்கும், அதுவரை நாதானியலின் குடும்பத்தினர் பயன்படுத்த ஒரு வாடகை வாகனத்தை வழங்கவும் டீலர்ஷிப் முன்வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நாதானியலின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் டெஸ்லா மாடல் ஒய் காரின் ஆரம்ப விலையே 49,990 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால், தோராயமாக சுமார் 36 லட்ச ரூபாய். இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கிய 2 மணி நேரத்திற்கு உள்ளாக நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








