அதிக அபராத செல்லாண்களை கொண்ட காரை வாங்கலாமா? தெரியாம வாங்கிட்டா என்ன மாதிரியான சிக்கல் வரும்?
யூஸ்டு கார்களுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிய வாகனங்களுக்கு இணையான வரவேற்பையே இந்தியாவில் பயன்படுத்திய வாகனங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் முன்னணி கார் பிராண்டுகள் சில புதிய வாகனங்களுக்கு அளிக்கப்படுவதைப் போலவே, செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டிற்கும் பலமடங்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கே நாட்டில் யூஸ்டு வாகனங்களுக்கான சந்தை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. அதேவேளையில், யூஸ்டு கார் மார்க்கெட் சார்ந்து பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
யூஸ்டு கார் டீலர்கள் சிலர், சிக்கல்களைக் கொண்டிருக்கும் கார்களை அசால்டாக மற்றவர்களின் தலையில் கட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால்தான், பயன்படுத்திய காரை வாங்குவது என்பது மிகவும் தந்திரமான செயலாகக் கருதப்படுகின்றது. அதேவேளையில் சரியான பயன்படுத்திய வாகனத்தை தேர்வு செய்தால் வரி உள்ளிட்ட பெரும் செலவில் இருந்து நம்மையும், நம் பாக்கெட்டையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதுதவிர, வாகனங்களுக்கு நிலவும் மிகப் பெரிய காத்திருப்பு காலத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். இதுபோன்ற பலன்கள் இருப்பதால்தான் பலர் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்தமாதிரியான சூழலில், வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத செல்லாண்களை நிலுவையில் கொண்டிருக்கும் வாகனங்களை யூஸ்டு கார் மார்க்கெட்டிலிருந்து வாங்கலாமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழும்பியிருக்கின்றது. இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.
நாம் வாங்க இருக்கும் குறிப்பிட்ட அந்த வாகனத்தின் மீது நிலுவையில் செல்லாண்கள் இருக்குமேயானால், அதன் உரிமம் மாற்றப்படுவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். அபராத செல்லாண்கள் செலுத்தப்படாமல் இருந்தால் கட்டாயம் பெயர் மாற்றம் செய்ய முடியாது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, பெயர் மாற்றம் மற்றும் எஃப்சி புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்போது வாகனத்தின் மீது எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது என்பது விதியாகும்.
எனவேதான் யூஸ்டு காரை வாங்கும்போது அந்த கார் தரமாக இருக்கின்றதா என்பதுடன் சேர்த்து, அந்த வாகனத்தின் பின்னணி குறித்தும் முழுமையாக அலசி ஆராய வேண்டும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, செல்லாண் பெண்டிங் இருக்குமானால் அதை வாகன உரிமையாளரிடம் கிளியர் செய்யுமாறு கேட்க வேண்டும்.
இல்லையெனில் யாரோ செய்த தவறுக்கான அபராதங்களை நீங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகக் கூடும். அதேவேளையில், யூஸ்டு கார் விற்பனையாளரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள் என்றால் அது குறித்து நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், தேவையற்ற அலைச்சலையும், மன நிம்மதி இழத்தலையும் இது ஏற்படுத்தும்.
இதுதவிர, தேவையற்ற பண செலவையும் வழங்கும். எனவே காரை வாங்கும் முன்னரே அனைத்தையும் சரிபார்த்து வாங்குவதே நல்லது. இல்லையெனில் நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை அந்த வாகனத்தை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியாது. அத்துடன், இடைப்பட்ட காலத்தில் போலீஸாரிடத்தில் சிக்க நேரிட்டால், அதிக செல்லாண் நிலுவைக்காக வாகனத்தை பறிகொடுக்கும் சூழலும் ஏற்படும்.
இந்த மாதிரியான நேரங்களில் அபராதம் மற்றும் தண்டனைகளைப் பெறுவது மாஜிஸ்திரேட்டின் முடிவைப் பொறுத்து மாறுபடும். நாம் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தால் மிகப் பெரிய தண்டனையைப் பெறுவதில் இருந்து தப்பித்து விட முடியும். இருப்பினும், இதனாலும் தேவையற்ற மன அழுத்தமே வந்து சேரும் என்பதை மறந்துவிடக் கூடாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் வாகனம் புதிதாக இருக்கின்றதா, நல்ல தரம்மிக்கதாக இருக்கின்றதா என்பதையே பார்த்து வாங்குகின்றோம். இதைவிட மிக முக்கியமானது அந்த வாகனத்தின் மீது ஏதேனும் வில்லங்கம் இருக்கின்றதா? குறிப்பாக, ஏதேனும் குற்றப் பின்னணியில் கார் சிக்கி இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே பின்னாளில் எந்த சிக்கலையும் நாம் சந்திக்க நேரிடாது.


Click it and Unblock the Notifications








