கொரோனா வைரஸ் அச்சத்தால் காசை கொண்டு போய் கொட்டும் மக்கள்... அவங்க பிஸ்னஸ் களைகட்டுது...
கொரோனா வைரஸ் அச்சத்தால், பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை களைகட்டி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே பெரும்பாலான பேருந்துகள் குறைவான பயணிகளுடன்தான் இயங்குகின்றன. இத்தனைக்கும் தற்போதைய நிலையில் மிக குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனாலும் அவற்றில் பயணம் செய்வதற்கு ஆள் இல்லை. அதேபோல் போதிய சவாரி கிடைக்காமல், ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களும் தடுமாறி வருகின்றனர். அவர்களில் பலர் வேறு ஏதேனும் ஒரு தொழிலுக்கு மாறியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி பொது போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கார் விற்பனையோ களை கட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதிலாக, சொந்த கார்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுவார்கள் எனவும், இதனால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும் பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே தெரிவித்து வந்தன. ஆனால் கொரோனா உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரால் புதிய கார் வாங்க முடியவில்லை.

அதற்கு பதில் பயன்படுத்தப்பட்ட கார்களை அவர்கள் வாங்கி வருகின்றனர். புதிய கார் வாங்குவதற்கு முடிவு செய்திருந்த பலரும் தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். எனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை தற்போது களைகட்டியுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட கார்கள் என பார்க்கையில், குறைந்த விலையில் கிடைக்க கூடிய சிறிய கார்களுக்குதான் அதிக தேவை உள்ளது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால், பொது போக்குவரத்து மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமே பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகரித்து வருவதற்கு காரணம் என டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டரை மாத காலமாகவே பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை களைகட்டியிருப்பதாகவும் பல டீலர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பிரயக்ராஜ் ஆட்டோமொபைல் சங்கத்தின் தலைவர் சுஷில் கர்பண்டா கூறுகையில், ''பிரயக்ராஜ் நகரில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது'' என்றார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால், பொது போக்குவரத்தில் பயணிக்க மக்கள் தயங்குவதால், சிறிய மற்றும் விலை குறைவான கார்களை வாங்குவதற்கான விசாரணைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''சிறிய கார்களை தற்போது பலரும் கேட்கின்றனர்.

விற்பனையாகும் கார்களில் சுமார் 40 சதவீத கார்கள், 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய்க்குள்ளான விலை வரம்பிற்குள் வருகின்றன'' என்றார். பிரயக்ராஜ் மட்டுமல்லாது, பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, டெல்லி போன்ற நகரங்களிலும், கடந்த மூன்று மாதங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு தேவை அதிகரித்து கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பயன்படுத்தப்பட்ட கார் டீலர் ஒருவர் கூறுகையில், ''முதல் முறையாக கார் வாங்குபவர்களிடம் இருந்துதான் பெரும்பாலான விசாரணைகள் வருகின்றன. இதற்கு முன் இவர்கள் பலர் பேருந்தையோ அல்லது டாக்ஸிகளையோ சார்ந்து இருந்தவர்கள். ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களை தேர்வு செய்ய வருகின்றனர்.

2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையிலான விலையில் ஒரு காரை தேர்வு செய்வதுதான் அவர்களுடைய விருப்பமாக உள்ளது. பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்காக ஒரு நாளைக்கு எனக்கு 5 முதல் 7 விசாரணைகள் வரை வருகின்றன'' என்றார். ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் கூட, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என தனியாக பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.இது குறித்து பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிய ஒருவர் கூறுகையில், ''எனது குடும்பத்திற்காக ஒரு காரை கட்டாயமாக வாங்கியாக வேண்டிய சூழலை கொரோனா வைரஸ் பிரச்னைதான் எனக்கு ஏற்படுத்தியது. பொது போக்குவரத்து பாதுகாப்பானது கிடையாது என எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் அச்சப்படுகின்றனர்'' என்றார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








