என்ன மனுஷன்யா... இப்படி ஒரு சோகம் நடந்தும் தொடர்ந்து வேலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்... கண் கலங்க வெச்சுட்டாரு
தனது தாய் உயிரிழந்த நிலையிலும், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தொடர்ந்து வேலை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், தனது தாய் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியை கேட்ட பிறகும், கோவிட்-19 நோயாளிகள் 15 பேரை மருத்துவமனைகளில் சேர்த்துள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் கடந்த மே 15ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்தான் தனது தாய் உயிரிழந்த நிலையிலும் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

அன்றைய தினம் மிகவும் பிஸியாக இருந்துள்ளது. கோவிட்-19 நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. பாதி ஷிப்ட் மட்டுமே முடிந்திருந்த நிலையில், பிரபாத் யாதவின் தாய் உயிரிழந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் தன்னுடைய ஷிப்ட்டை முழுமையாக முடித்த பிறகே இறுதி சடங்கிற்கு பிரபாத் யாதவ் சென்றுள்ளார்.

மதுராவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள மெயின்புரி என்ற பகுதியில் பிரபாத் யாதவுடைய தாயின் இறுதி சடங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உடனேயே பிரபாத் யாதவ் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரியாக சொல்வதென்றால், சுமார் 24 மணி நேரத்திற்கு உள்ளாக அவர் மீண்டும் பணிக்கு வந்து விட்டார்.

இதுகுறித்து பிரபாத் யாதவ் கூறுகையில், ''நான் நிலைகுலைந்து போனேன். ஆனால் எனது மனதை திடமாக்கி கொண்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. நான் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை அப்படியே பாதியில் விட்டு விட முடியாது. நாங்கள் செய்து கொண்டுள்ள வேலை மிகவும் முக்கியமானது'' என்றார்.

பிரபாத் யாதவ் கடந்த 9 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அவருக்கு தற்போது 33 வயதாகிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பணியில் பிரபாத் யாதவ் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது முதல் நவம்பர் வரை அவர் அந்த பணியில் இருந்தார். இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கிய பிறகு, அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்.

இதன்பின் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிட்-19 நோயாளிகளை அழைத்து செல்லும் பணியை பிரபாத் யாதவ் மீண்டும் செய்ய தொடங்கினார். தாய் உயிரிழந்து விட்டதால் சில நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு, பிரபாத் யாதவை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பிரபாத் யாதவ் விரும்பியுள்ளார்.

எனவே அவர் உடனடியாக மீண்டும் பணிக்கு வந்து விட்டார். பிரபாத் யாதவின் தாய் உயிரிழந்த சமயத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் பொது போக்குவரத்து சேவைகள் இல்லை. எனவே பிரபாத் யாதவ் தனது சொந்த ஊருக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். எனினும் இறுதி சடங்கை முடித்த கையோடு பிரபாத் யாதவ் மீண்டும் பணிக்கு வந்து விட்டார்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். பிரபாத் யாதவின் தந்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அப்போதும் கூட வீட்டிற்கு சென்று, இறுதி சடங்குகளை முடித்த பிறகு, ஒரே நாளில் பிரபாத் யாதவ் மீண்டும் பணிக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரபாத் யாதவ் கூறுகையில், ''எனது தாய் உயிரிழந்து விட்டார். என்னால் சிலரின் உயிரை காப்பாற்ற முடிந்தால், எனது தாய் பெருமைப்படுவார்'' என்றார். இக்கட்டான நேரத்திலும் கூட மற்றவர்களுக்கு உதவி செய்யும் பிரபாத் யாதவ்வின் செயல்பாடுகள் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் தற்போது ஆம்புலன்ஸ்களுக்கான தேவை உயர்ந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களின் மேல் பகுதியில் பெரும்பாலும் சிகப்பு மற்றும் நீல வண்ணத்தில் எமர்ஜென்ஸி லைட்கள் பொருத்தப்பட்டிருக்கும். சிகப்பு மற்றும் நீல வண்ண கலவை பயன்படுத்தப்படுவதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

பொதுவாக சிகப்பு வண்ணம் எச்சரிக்கையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஆனால் அனைத்து வாகனங்களின் டெயில் லைட்களும் சிகப்பு நிறத்தில்தான் இருக்கும் என்பதால், மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க சிகப்பு வண்ணம் தவறி விடலாம். ஆனால் சிகப்புடன் வழங்கப்படும் நீல வண்ணம் தனித்து தெரியும்.

இதன் மூலம் மற்ற வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் நகர்ந்து வழி விடுவார்கள். எனவேதான் ஆம்புலன்ஸ்களில் சிகப்பு-நீல வண்ண கலவை பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர சிகப்பு நிறம் பகல் நேரத்தில் பார்வைக்கு எளிதாக தெரியும். அதே சமயம் நீல நிறம் இரவு நேரத்தில் பார்வைக்கு எளிதாக தெரியும். சிகப்பு-நீல வண்ண கலவை பயன்படுத்தப்படுவதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று.


Click it and Unblock the Notifications








