உ.பி அரசின் இந்த சாதனையை கல்வெட்டுல தான் எழுதி வைக்கனும்! நேற்று இந்த ஏரியாவில் சாலையே இல்லை!
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்த நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில், சாலைகள் எந்த அளவிற்கு தரமானதாகவும், நீளமானதாகவும் அமைந்துள்ளதோ அதை பொறுத்தே அந்த நாட்டின் போக்குவரத்து இருக்கும். போக்குவரத்து சீராக இருந்தால்தான் புது, புது வணிகங்களை துவங்க மக்கள் முன்வருவர். இதனை நன்கு புரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே நாட்டின் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதுடன், விரைவுச்சாலை என்கிற புதிய கான்செப்ட்டையும் மத்திய அரசு கொண்டுவந்தது. புதிய கான்செப்ட் என கூறினாலும், விரைவுச்சாலைகளுக்கான திட்டங்களை கடந்த 10 வருடங்களுக்கு முன்பே அமல்படுத்த மத்திய அரசு துவங்கிவிட்டது.
மத்திய அரசு மட்டுமின்றி, அந்தந்த மாநில அரசாங்கங்களும் சாலை கட்டமைப்பை விரிவுப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச மாநில அரசாங்கம் கங்கா விரைவுச்சாலையை அமைத்து வருகிறது. இந்தியாவில் மத்திய அரசாங்கம் இல்லாமல், மாநில அரசாங்கமே அமைத்துவரும் நீண்ட தொலைவிற்கான விரைவுச்சாலையாக கங்கா விரைவுச்சாலை பார்க்கப்படுகிறது.

இந்த விரைவுச்சாலையை சிறுக சிறுக அமைத்து உத்தர பிரதேச அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கங்கா விரைவுச்சாலையை அமைப்பதில் உத்தர பிரதேச மாநில அரசாங்கம் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், வெறும் 24 மணிநேரத்தில் கங்கா விரைவுச்சாலையை மேலும் 34கிமீ தொலைவிற்கு அமைத்து சாதனை படைத்திருப்பது ஆகும்.
உத்தர பிரதேச மாநில அரசாங்கம் அமைத்துவரும் விரைவுச்சாலை என கூறினாலும், இந்த விரைவுச்சாலையை அதானி சாலை & போக்குவரத்து நிறுவனம் மற்றும் பட்டேல் உள்கட்டமைப்பு நிறுவனம் என இரு தனியார் நிறுவனங்கள் இணைந்து அமைத்து வருகின்றன. 24 மணிநேரத்தில் கங்கா விரைவுச்சாலையில் கூடுதலாக 34.24கிமீ தொலைவிற்கு இரு வழி சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது.

அதாவது, சாலையை தவிர்த்து மற்ற ஃபினிஷிங் டச் வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த 34.24கிமீ தொலைவில் 10கிமீ தொலைவிற்கு உலோக தடுப்பு கம்பிகள் சாலைகளின் ஓரத்தில் இதே 24 மணிநேரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்து 105 டன் தார் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 லட்சத்து 71 ஆயிரத்து 210 சதுர மீட்டர் பரப்பளவிற்கு இந்த 24 மணிநேரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹர்டோய் மற்றும் உன்னாவ் மாவட்டங்கள் இடையே இந்த 24 மணிநேரத்தில் கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை ஆனது உலக சாதனைகள் புத்தகம், ஆசிய சாதனைகள் புத்தகம் மற்றும் இந்திய சாதனைகள் புத்தகம் உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு உள்ளாகவே 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த விரைவுச்சாலை ஆனது ஏற்கனவே கூறியதுபோல், ஒவ்வொரு பகுதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது. தற்சமயம் மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையே கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவுக்கு முன்பே இந்த விரைவுச்சாலை பணிகள் அனைத்தையும் நிறைவு செய்ய உத்தர பிரதேச அரசு ஆரம்பத்தில் திட்டமிட்டது. ஆனால், மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதினால் இந்த விரைவுச்சாலை பணிகள் தாமதமாகின. அதனை ஈடுக்கட்டும் விதமாகவே, 24 மணிநேரத்திற்குள் 34.24கிமீ தொலைவிற்கு விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு விரைவாக அமைத்ததினாலேயே இந்த சாலையின் தரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாளில் 34.24கிமீ தொலைவிற்கு சாலை அமைப்பது என்பது மிகவும் ஆச்சிரியமான விஷயமாகும். இத்தனை கிமீ தொலைவிற்கு 15 அடி கிராம சாலையை அமைப்பதே சிரமம் எனும்போது, உத்தர பிரதேச அரசு மிக அகலமான விரைவுச்சாலையை அமைத்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. இன்றைய கால மாடர்ன் தொழிற்நுட்பங்களின் உதவி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications








