இனி ஒரு உயிர் கூட போக கூடாது... துணிச்சலான முடிவை எடுத்த யோகி ஆதித்யநாத்... மனுஷன் பட்டைய கௌப்புறாரு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் பிரச்னைகளை தாங்க முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளன.

மேலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்காக, கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையும் உலக நாடுகளுக்கு உள்ளது. இது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதால், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

குறிப்பாக கச்சா எண்ணெய் பயன்பாட்டிற்கு முழுக்க முழுக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் நமது இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெரும் தலைவலி. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இந்தியாவும் ஆர்வமாக உள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதவிர மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு முயற்சி செய்து வருகின்றன. இந்த வரிசையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதலில் உற்பத்தி செய்யப்படும் 1 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு சாலை வரியில் இருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 75 சதவீத விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த சலுகையை வழங்கியிருக்கும் அதே நேரத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளையும் உத்தர பிரதேச அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்திய அளவில் பார்த்தால், அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் உள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்காக, உத்தர பிரதேச அரசு அபராத தொகைகளை உயர்த்தியுள்ளது. இதன்படி தவறான இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்தால், 500 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என முன்மொழியப்பட்டுள்ளது.

இது முதல் தடவை செய்யும் விதிமீறலுக்கான அபராதம் ஆகும். இரண்டாவது முறை என்றால், 1,500 ரூபாயை அபராதமாக செலுத்த நேரிடும். இதுதவிர ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களை ஓட்டுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது உத்தர பிரதேச அரசின் நம்பிக்கை.

பொதுவாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை உயர்த்தினால், மக்கள் மத்தியில் மிக கடுமையான எதிர்ப்பு எழும். இருந்தாலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








