வைரலாகும் வீடியோ... காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடுகிறது...
காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடி வருகிறது. இது குறித்த தகவல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமே. இந்த வகையில் தீபாவளி பண்டிகை சமீபத்தில் இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும், கோர்ட்களும் பட்டாசுகளை வெடிக்க சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆனால் வழக்கம் போல அதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பலர் கட்டுப்பாடுகளை மீறி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

இந்த சூழலில் ஓடி கொண்டிருக்கும் காரில் பட்டாசுகளை வெடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஓடி கொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் வைத்து பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

காருக்கு உள்ளே இருந்தபடி சன் ரூஃப் மூலமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. சன் ரூஃப் வழியாக ராக்கெட்களும் விடப்பட்டுள்ளன. பட்டாசுகள் வெடிக்கப்பட்ட காருக்கு பின்னால் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே இருந்தவர்களின் இந்த சேட்டை தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான நேரம் தெரியவில்லை. ஆனால் உத்தர பிரதேச அரசு பட்டாசு வெடிக்க இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் நிர்ணயித்திருந்தது. ஓடி கொண்டிருக்கும் வாகனத்திற்கு உள்ளே இருந்தபடி பட்டாசு வெடிப்பது மிகவும் அபாயகரமானது. அது சட்ட விரோதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவில் காரின் பதிவு எண் சரியாக தெரியவில்லை. எனவே காரில் இருந்து பட்டாசு வெடித்தவர்களை கண்டறிவதில் காவல் துறை சவாலை எதிர்கொண்டுள்ளது. எனினும் தவறை செய்தவர்கள் கண்டறியப்படுவார்கள் என நம்பலாம்.

பொதுவாக பட்டாசுகளை வெடிப்பதே ஆபத்தானதுதான். பட்டாசுகளை வெடிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓடி கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்தபடி பட்டாசு வெடிப்பது இன்னும் ஆபத்தானது. ஏனெனில் வாகனத்தின் கேபினில் உள்ள மெட்டீரியல்கள் எளிதாக தீப்பற்றி கொள்ளும் தன்மை உடையவை.

குறிப்பாக வாகனத்தின் இருக்கைகளில் தீப்பற்ற சிறு தீப்பொறி போதும். அத்துடன் ஓடி கொண்டிருக்கும் வாகனத்தில் பட்டாசு வெடித்தால், அது கேபினுக்குள் விழுந்து விடுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே இதுபோன்ற விபரீத முயற்சிகளை நீங்கள் எப்போதும் செய்ய வேண்டாம். தற்போது வைரலாக பரவி கொண்டுள்ள இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதுபோன்ற செயல்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. தற்போது ஹோண்டா சிட்டி காருக்குள் இருந்தவர்களை கண்டறிய போலீசார் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








