பிரதமருக்கே இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வாலாட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்... நண்பர்களுடன் அட்டகாசம்
பிரதமருக்கே இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வாலாட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களின் மேல் பகுதியில், சைரன்கள் (Sirens) மற்றும் பிளாஷர்களை (Flashers) பயன்படுத்துவது சட்ட விரோதம். இந்த உத்தரவு இந்தியா முழுமைக்கும் பொருந்தும். உண்மையில் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ வாகனத்தின் மேல் பகுதியில் கூட பிளாஷரை பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனால் பலர் இந்த விதிமுறையை வெளிப்படையாகவே மீறி வருகின்றனர்.

பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள்தான் இந்த விதிமுறையை மீறுகின்றனர். தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்காக அவர்கள் இதனை செய்கின்றனர். இந்த சூழலில் தனது சொந்த வாகனத்தில், சைரன் மற்றும் பிளாஷர்களை பயன்படுத்தியதற்காக உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் படாயூனை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்குதான் அல்மோராவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட சமயத்தில் அவர் தனக்கு சொந்தமான மாருதி சுஸுகி டிசையர் காரில் இருந்தார். அத்துடன் அவரது நண்பர்கள் 4-5 பேரும் இருந்தனர். விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர்கள் உத்தரகாண்ட் வந்திருந்தனர்.

ஆனால் விதிமுறைகளுக்கு எதிராக சைரன் மற்றும் பிளாஷர்கள் பொருத்தப்பட்டிருந்ததால், உத்தரகாண்ட் போக்குவரத்து போலீசார் அல்மோரா நகரில் அந்த காரை நிறுத்தினர். போக்குவரத்து போலீசாரால் கார் நிறுத்தப்பட்ட பிறகு, அதன் டிரைவர் வெளியே வந்தார். பின்னர்தான் உத்தரபிரதேச மாநிலம் படாயூனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

இதன்பின் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே உத்தரகாண்ட் போக்குவரத்து போலீசார், சிட்டி பேட்ரோல் யூனிட்டை அழைத்தனர். அப்போது காரின் மேலே பிளாஷர் பொருத்தி கொண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் எவ்வித பிரச்னையும் இன்றி பயணிக்க முடியும் என அந்த இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால் இது சட்ட விரோதம் என உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்தனர்.

இதன்பின் உத்தரபிரதேச இன்ஸ்பெக்டருக்கு உத்தரகாண்ட் போலீசார் 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். முன்னதாக விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு சைரன்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏராளமான அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீசார் இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்த தொடங்கி விட்டனர்.

இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ காரின் மேலே கூட சைரன் பொருத்த அனுமதி கிடையாது. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், ராணுவ வாகனங்கள், அதிகாரப்பூர்வ போலீஸ் வாகனங்கள் போன்ற அவசர கால வாகனங்களில் மட்டுமே பிளாஷர்களையும், சைரன்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் இதுபோன்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் தொடர்ந்து பிளாஷர்களையும், சைரன்களையும் பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர். தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக பிளாஷர்களையும், சைரன்களையும் அவர்கள் கருதுவதே இதற்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








