2025இல் 6 மாதம் கூட இன்னும் முழுசா முடியல... இந்த ஊரில் சாலையிலும் உசுருக்கு உத்தரவாதம் இல்ல!!
இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் சர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கிலான சாலை விபத்துகள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடக்கின்றன. தினமும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், நம்மில் பலரிடத்தில் சாலை விபத்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகும். அதேபோல், சாலைகளின் தரமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்தான், இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக மோசமான சாலைகளை கொண்ட வட இந்திய மாநிலம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவை காட்டிலும், வட இந்தியாவில் நிறைய பகுதிகளில் சாலைகளின் தரம் மோசமான நிலையில் உள்ளதை அங்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். சாலைகள் மட்டுமின்றி, நிறைய வட இந்திய மாநிலங்களில் பொது போக்குவரத்து வாகனங்கள் கூட தரமற்ற நிலையில் இருப்பதை அங்கிருந்து இணையத்தில் வெளியாகும் படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்திருப்பீர்கள்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் சாலையில் அதிவேகமாக வாகனத்தில் செல்வது எல்லாம் தவறே கிடையாது என்றே வட இந்திய மாநிலங்களில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், அங்குள்ள பலருக்கு ஒவ்வொரு சாலைகளிலும் அதிகப்பட்ச வேகம் எவ்வளவு என்பதே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் இதில் கவலை அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
இதனாலேயே, மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் இந்தியாவின் மிக பெரும் மாநிலமான உத்தர பிரதேசம் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறக்கூடிய மாநிலமாக உள்ளது. இந்த 2025ஆம் வருடத்தில் மட்டும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து கடந்த மே 20ஆம் தேதி வரையில் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளன.

இதில், கிட்டத்தட்ட 7,700 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 46 ஆயிரத்து 52 சாலை விபத்துகள் இந்த வட இந்திய மாநிலத்தில் பதிவாகி உள்ளன. இந்த விபத்துகளில் 24 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரத்து 665 பேர் காயமடைந்து உள்ளனர். அதுவே, 2023ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 534 சாலை விபத்துகள் உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன.
இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 652 மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 98 ஆகும். இந்த புள்ளி விபரங்களை எல்லாம் உத்தர பிரதேசத்தின் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை iRAD எனப்படும் சாலை விபத்துகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளம் மற்றும் eDAR எனப்படும் விபத்து குறித்த விரிவான மின்னணு பதிவின் மூலமாக உத்தர பிரதேச சாலை பாதுகாப்பு & விழிப்புணர்வு குழு பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, உத்தர பிரதேச மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான சாலை பாதுகாப்பு டேஸ்போர்டில் பதிவு செய்யப்பட்ட விபரங்களையும் இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வின் மூலமாக மற்றொரு விஷயத்தையும் கண்டறிந்துள்ளனர். அதாவது, உத்தர பிரதேச மாநிலத்தில் பிற்பகல் நேரத்திலும், மாலை நேரத்திலும் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகின்றனவாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆய்வானது உத்தர பிரதேச மாநிலத்திற்குள், மாநில அளவில் நடத்தப்பட்டது ஆகும். ஆதலால்தான், இதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்த விபரங்கள் இல்லை. இருப்பினும், உத்தர பிரதேசத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன என்று கடந்த ஆண்டு இறுதியிலேயே ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருந்தது. அந்த ஆய்வறிக்கையில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நடக்கக்கூடிய மாநிலமாக 2வது இடத்தில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









