சிரிப்ப அடக்க முடியல... ஏடிஎம் அட்டையை திருடி விட்டு கொள்ளையர்கள் செய்த காரியம்... என்னனு தெரியுமா?
ஏடிஎம் அட்டையை திருடி விட்டு இரண்டு கொள்ளையர்கள் செய்த காரியம், சிரிப்பை வரவழைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா காவல் துறையினர், 2 கொள்ளையர்களை திரைப்பட பாணியில் விரட்டி பிடித்துள்ளனர். ஆனால் காவல் துறையினரிடம் சிக்குவதற்கு முன்பு, இரண்டு கொள்ளையர்களும் செய்த காமெடி சமூக வலை தளங்களில் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. நேற்று முன் தினம் (ஜூலை 22ம் தேதி) இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

நொய்டாவை சேர்ந்த ஒருவர் இரவு உணவு அருந்துவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள், அவரின் கைப்பேசி மற்றும் மணி பர்ஸை துப்பாக்கி முனையில் திருடி விட்டு தப்பி சென்றனர். திருடப்பட்ட மணி பர்ஸில், கொஞ்சம் பணம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவை இருந்துள்ளன.

ஆனால் கொஞ்ச தூரம் சென்ற பிறகு கொள்ளையர்கள் இருவரும் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். இதற்கான காரணம், குபீர் சிரிப்பை வரவழைக்கும் ரகம். ஏடிஎம் அட்டையை பறிகொடுத்தவரிடமே, அதனுடைய கடவுச்சொல்லை கேட்பதற்காக அவர்கள் திரும்பி வந்தனர். பின்பு மீண்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் திருடர்கள் இருவரும் வந்த பைக்கை, ஓரிடத்தில் காவல் துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் பைக்கை நிறுத்தும்படி காவல் துறையினர் கூறியும், அவர்கள் நிறுத்தவில்லை. அதற்கு மாறாக காவல் துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதன் காரணமாக அவர்களை காவல் துறையினர் விரட்டி சென்றனர். அத்துடன் பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், இருவரும் காயமடைந்து கீழே விழுந்தனர். இதன்பின் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினரிடம் சிக்கியுள்ள இரண்டு பேரும், கௌரவ் சிங் மற்றும் சதானந்த் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொள்ளையடித்த மணி பர்ஸ், 3,200 ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் அட்டையுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளும், அவர்களின் பைக்கும் காவல் துறையினரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தை நடத்துவதற்கு அவர்கள் இருவரும் பயன்படுத்திய பைக் யாரிடம் இருந்தாவது திருடப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பொதுவாக நகை பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு யாரிடம் இருந்தாவது திருடப்பட்ட பைக்கைதான் சமூக விரோதிகள் பயன்படுத்துவார்கள்.

அவர்களை பொறுத்தவரை, காவல் துறையினரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க, திருடப்பட்ட பைக்குகள்தான் சிறந்தது. எனவே சமூக விரோதிகளிடம் இருந்து உங்கள் பைக்கை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக மிகவும் எளிதாக கொள்ளையடிக்கக்கூடிய பைக்குகள்தான் திருடர்களின் முதல் தேர்வாக இருக்கும்.

ஒரு சிலர் ஞாபக மறதி காரணமாக, சாவியை பைக்கிலேயே விட்டு சென்று விடுகின்றனர். திருடர்களுடைய பணியை இது எளிதாக்கி விடும். இதுபோன்று சாவி இருக்கும் பைக்குகள்தான் கொள்ளையர்களின் முதல் குறி. எனவே எக்காரணத்தை கொண்டும் சாவியை பைக்கில் விட்டு செல்லாதீர்கள். அத்துடன் பைக் பூட்டப்பட்டுள்ளதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.

அத்துடன் பைக்கை நிறுத்தி வைக்கும் இடங்களில், ஒரு சில யுக்திகளையும் நீங்கள் கையாளலாம். இதன்படி திருடர்களின் பார்வையில் படாதபடி, எஸ்யூவி கார்கள் போன்ற பெரிய வாகனங்களுக்கு பின்னால் உங்கள் பைக்கை நிறுத்தலாம். கொள்ளையர்களின் பார்வையிலேயே சிக்காது என்பதால், உங்கள் பைக் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

இதுதவிர மற்றவர்களின் பைக்குகளுடன் சேர்த்து உங்கள் பைக்கையும் நிறுத்தி வைக்கும் யுக்தியையும் கடைபிடிக்கலாம். நீங்கள் பலருடன் சேர்ந்து ஒரு குழுவாக சென்றால், கண்டிப்பாக உங்கள் பைக்கிற்கு அருகே சில பைக்குகள் நிற்கும். அதுவே தனியாக செல்லும்பட்சத்தில், வேறு சில பைக்குகள் நிற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டறிந்து, அங்கே உங்கள் பைக்கை நிறுத்த வேண்டும்.

இது ஏன் நல்ல திட்டம்? என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பைக்குகள் குழுவாக இருக்கும்பட்சத்தில், உங்கள் பைக் குறி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது முதல் காரணம். அதிக பைக்குகள் நிற்கிறது என்றால், அதிகம் பேர் வந்து செல்வார்கள் என்பதை குறிக்கும். எனவே கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தயங்குவார்கள் என்பது இரண்டாவது காரணம்.

இதுதவிர பைக்குகள் கொள்ளையடிக்கப்பட்டால், அதனை கண்டுபிடிப்பதற்கான சாதனங்களையும் வாங்கி பொருத்தி கொள்வது நல்லது. இதுபோன்ற சாதனங்கள் ஓரளவிற்கு குறைவான விலையிலேயே சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய பைக்கை பாதுகாக்க, இதுபோன்ற சாதனங்களுக்கு கொஞ்சம் செலவிடுவதில் தவறில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








