பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி ஐஸ் க்ரீம் சாப்பிட்டதற்கு அபராதம்... அழுதே காரியத்தை சாதித்த பெண்... வீடியோ
பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி ஐஸ் க்ரீம் சாப்பிட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், பெண் ஒருவர் அழுதே காரியத்தை சாதித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இ-சலான் அறிமுகம் செய்யப்பட்டது. காவல் துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் என்பதும் இ-சலான் அறிமுகம் செய்யப்பட்டதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் இ-சலான் வழங்கப்பட்ட காரணத்தால், காவல் துறையினரிடம் ஒரு பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

NYOOOZ UP- Uttarakhand யூ-டியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோமதி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, சம்பந்தப்பட்ட பெண் ஸ்கூட்டரில், கோமதி ஆற்று பாலத்தை கடந்து கொண்டிருந்தார்.

அப்போது ஐஸ் க்ரீம் வியாபாரி ஒருவரை பார்த்ததும், ஸ்கூட்டரை அங்கே நிறுத்தியுள்ளார். இதன்பின் அவரிடம் ஐஸ் க்ரீம் வாங்கிய பின் அந்த பெண் அங்கேயே சாப்பிட்டுள்ளார். ஸ்கூட்டர் அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து வந்த காவல் துறையினர், பாலத்தின் மீது ஸ்கூட்டர் நிற்பதை பார்த்துள்ளனர்.

பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்பதால், ஸ்கூட்டரை அங்கிருந்து எடுக்கும்படி அந்த பெண்ணிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் சொன்னதை கேட்காமல், அந்த பெண் தொடர்ந்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டு கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின் ஸ்கூட்டரை போட்டோ எடுத்து கொண்டு காவல் துறையினர் அங்கிருந்து சென்று விட்டனர். இதன்பின் அந்த பெண்ணின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. இதில், அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இ-சலான் வந்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த பெண் மீண்டும் பாலத்திற்கு சென்றார்.

அப்போது அதே காவலர்களை அவர் மீண்டும் பார்த்தார். இதன்பின் அவர்கள் முன் அந்த பெண் கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டார். மேலும் காவலர்களின் தொப்பி மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து கொண்ட அந்த பெண், தனது ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் பகுதியில் வைத்து பூட்டி விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி விட்டனர்.

முதலில் அந்த பெண் அழுவதை நிறுத்த அவர்கள் முயற்சி செய்தனர். இதனை கண்ட காவலர்கள் சலானை ரத்து செய்வதாக அந்த பெண்ணிடம் கூறினர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், அந்த பெண் செய்து கொண்டிருப்பது தவறு என்பதை அவருக்கு புரிய வைத்தனர்.

அத்துடன் காவலர்களின் உடைமைகளை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதன்பின்தான் காவலர்களிடம் இருந்து பறித்த பொருட்களை அந்த பெண் திரும்ப ஒப்படைத்தார். இதற்கிடையே 2 மணி நேரத்தில் சலானை ரத்து செய்வதாக அந்த பெண்ணிடம் காவலர்கள் கூறினர்.
ஆனால் சலான் ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று நடந்து கொள்வது சரியான விஷயமாக இருக்காது. சலான் தவறாக வழங்கப்பட்டு விட்டது என நீங்கள் கருதினால், அதனை நீதிமன்றத்தில் முறையிடுவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








