ஒரே நேரத்தில் 2 மொபைல் போன்... கையும் களவுமாக சிக்கிய வாகன ஓட்டி!! சிசிடிவி வீடியோ மூலம் தூக்கிய போலீஸார்!
ஒரே நேரத்தில் இரு மொபைல் போன்களை உபயோகப்படுத்திய மோட்டார்சைக்கிள் ஓட்டி சிசிடிவி வீடியோ ஒன்றின் மூலமாக அபராதத்திற்கு உள்ளாகி உள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளதை மறுப்பதற்கில்லை. இதற்கு நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதை ஒரு காரணமாக சொன்னாலும், அதேநேரம் நம் மக்களிடையே சாலை விழிப்புணர்வும் போதிய அளவில் இல்லை என்பதும் கசப்பான உண்மையே.

குறிப்பாக மொபைல் போனை பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இருந்தாலும், இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பலன் கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இன்னமும் சாலையில் போனை நோண்டியவாறும், போனில் பேசியவாறும் வாகன ஓட்டுபவர்களை தினந்தோறூம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் வதோதாராவில் வாகன ஓட்டி ஒருவர் இரு மொபைல் போன்களை பயன்படுத்தியவாறு பைக்கை ஓட்டியபோது சிக்கியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

கைகள் இரண்டிலும் இரு மொபைல்களை வைத்திருக்கும் இந்த வாகன ஓட்டி, வீடியோவில் பல காட்சிகளில் பைக்கின் ஹேண்டில்பாரை பிடித்திருக்கவில்லை. ஹேண்டில்பாரை பிடிக்க வேண்டிய சமயங்களில் மட்டுமே இரு போன்களையும் ஒரே கைக்கு மாற்றி, ஒரு கையால் ஹேண்டிலை கட்டுப்படுத்துகிறார். இது உண்மையில் மிக ஆபத்தான செயலாகும்.

ஏனெனில் இவ்வாறு பைக்கை இயக்கினால், எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்துகளின்போது துரிதமாக செயல்பட முடியாமல் போகலாம். இது போக்குவரத்து விதியை பின்பற்றாத அவருக்கு மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், மேலுள்ள வீடியோவில் இந்த குறிப்பிட்ட வாகன ஓட்டி தற்காப்பு கவசமாக ஹெல்மெட்டையும் அணிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த காட்சிகளை கண்ட வதோதாரா போலீசார், இந்த ரைடருக்கு ரைடிங்கின்போது மொபைல் போனை பயன்படுத்தியதற்காக மட்டுமே ரூ.1,000 அபராதம் விதித்து இ-செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். இயக்கத்தின்போது ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டுள்ளதுபோல் அபராத செல்லானில் குறிப்பிடப்படவில்லை.

சிசிடிவி வீடியோ மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இ-செல்லானையும் வதோதாரா போலீஸார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதன்படி பார்க்கும்போது, மோட்டார் வாகன சட்ட பிரிவு 177-இன் கீழ் இந்த வாகன ஓட்டிக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, மோட்டார் வாகனம் ஒன்றை இயக்கும்போது ஓட்டுனர் மொபைல் போன் மற்றும் ஹெட்போன் கூட பயன்படுத்த கூடாது.

இதில் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்பது உங்களில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்கலாம். ஆனால் ஹெட்போன் கூட பயன்படுத்த கூடாது என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்து ஹெல்மெட்டிற்குள் மொபைல் போனையோ அல்லது ஹெட்போனையோ மற்றவர்களுக்கு தெரியாதப்படி அணிந்திருப்பர். ஆனால் உண்மையில் இதுவும் குற்றமே ஆகும்.

ஏனெனில் மொபைல் போனை யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தினாலும் சரி, தெரியும்படி பயன்படுத்தினாலும் சரி சாலையில் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாது என்பது போலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், ஹெட்போனில் பாட்டு கேட்டப்படி பயணம் செய்யும்போதும் மற்ற வாகனங்களின் ஹார்ன் சத்தங்களை கேட்க முடியாமல் போகிறது.

அதிகப்பட்சமாக, ஆடியோ அமைப்பு உள்ள கார்களில் இன்ஃபோடெயின்மெண்ட் வாயிலாக பாட்டு கேட்டப்படி வேண்டுமென்றால் பயணம் செய்யலாம். ஆடியோ சிஸ்டம் இல்லாத கார்களை வைத்திருப்போர் பயணத்தின்போது பாட்டு கேட்க விரும்பினால் தங்கள் மொபைல் போனை பயன்படுத்தலாம். ஆனால் பாட்டை வெளியே கேட்கும்படிதான் வைக்க வேண்டும். ஹெட்போன் பயன்படுத்த கூடாது என்கிறது மோட்டார் வாகன சட்டம்.


Click it and Unblock the Notifications