தடுப்பை உடைத்துக் கொண்டு பாய்ந்த மஹிந்திரா இ2ஓ கார்... பெங்களூரில் பரபரப்பு!
பெங்களூரில், மருத்துவமனையின் வாலட் பார்க்கிங் டிரைவர் ஓட்டி வந்த மஹிந்திரா இ2ஓ கார் ஒன்று விபத்துக்குள்ளானது. அதன் விபரங்களை காணலாம்.
பெங்களூரில், மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் கார் ஒன்று உலோக தடுப்பு உடைத்துக் கொண்டு கட்டட வளாகத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று மாலை நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.

பெங்களூர் ஜெயநகரில் உள்ள எமது நார்த் பிளாக் அலுவலக வளாகத்தில் மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. எமது அலுவலகம் அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவரின் கார் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த மருத்துவமனையின் கார் பார்க்கிங் வளாகம் எமது அலுவலகம் அருகில்தான் அமைந்துள்ளது. அதில், நிறுத்தப்பட்டிருந்த காரை வாலே பார்க்கிங் டிரைவர் திரும்ப எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது, எமது அலுவலகம் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியுள்ளது. காம்பவுன்ட் சுவர் மீது கொடுக்கப்பட்டு இருந்த உலோகத் தடுப்பை உடைத்துக் கொண்டு கார் பார்க்கிங் பகுதியில் அந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் பாய்ந்தது.

இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காம்பவுண்ட் சுவருக்கும், தரைதளத்திற்கும் இடையில் கார் சிக்கி மாட்டிக் கொண்டது. நல்லவேளையாக காரை ஓட்டி வந்த அந்த வாலே ஊழியர் காயமின்றி தப்பினார். அதேபோன்று, அந்த இடத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்தில் சிக்கிய அந்த மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதே ஆறுதலான செய்தி. சில மணிநேரம் கழித்து அந்த வாலே பார்க்கிங் பணியாளர்கள் வந்து அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

புதிய காரை ஓட்டும்போது வாலே பார்க்கிங் ஊழியர்கள் இதுபோன்று தவறு செய்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. இதனால், அவர்களது கையில் காரை கொடுப்பது கார் உரிமையாளர்களுக்கு எப்போதுமே பதட்டத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே உள்ளது.
புதிய மஹிந்திரா டியூவி300 காரின் படங்கள்!
புதிய மஹிந்திரா டியூவி300 காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications