பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஒன்றின் ஆயுட்காலம் இத்தனை மணிநேரமே!! தெரியாம போய் டிடிஆர்-கிட்ட மாட்டிக்காதீங்க...
இரயிலில் பயணிக்காவிடினும் இரயில் நிலையத்திற்குள் நுழைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் எந்த அளவிற்கு முக்கியானது? பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை வைத்திருக்கவில்லை எனில், எத்தகைய அபராதங்களுக்கு நீங்கள் உள்ளாகுவீர்கள்? ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட் எவ்வளவு மணிநேரத்திற்கு செல்லுப்படியாகும்? என்பது போன்றதான கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இரயில் நிலையத்திற்கு சென்று பயணி ஒருவரை வழியனுப்பி வைக்கவும் அல்லது பயணி ஒருவரை அழைத்து வரவும் உங்களிடம் பிளாட்ஃபார்ம் டிக்கெட் இருக்க வேண்டியது அவசியமாகும். இரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் இருந்தால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதுவே, இரயிலில் பயணிக்க போவதில்லை எனில் உங்களிடம் கட்டாயம் பிளாட்ஃபார்ம் டிக்கெட் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் நீங்கள் அபராதத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள்.

இரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் பல காலமாக பயன்பாட்டில் இருப்பதால், அதனை பற்றிய புரிதல் ஓரளவிற்கு உங்களுக்கு இருக்கும். பிளாட்ஃபார்ம் டிக்கெட்கள் தனி நபர் ஒருவருக்கு இரயில் நிலையம் அமைந்திருக்கும் இடத்தையும், நிலையத்தின் அளவையும் பொறுத்து ரூ.10-இல் இருந்து ரூ.50 வரையிலான கட்டணத்தில் உள்ளன. இந்த கட்டணத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை எடுத்து கொண்டு ஒரு நாள் முழுவதும் உங்களால் இரயில் நிலையத்திற்குள் இருக்க முடியும் என்றால், அதுதான் முடியாது.
ஏனெனில், இந்திய இரயில்வே நிர்வாகம் தனது இணையத்தள பக்கமான erail.in -இல் கூறும் அறிக்கையின்படி பார்த்தோமேயானால், ஒரு இரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட்டிற்கான ஆயுட்காலம் வெறும் 2 மணிநேரங்கள் மட்டுமே ஆகும். அதாவது, ஒரு இரயில் டிக்கெட்டை எடுத்த பின் அடுத்த 2 மணிநேரங்களுக்கு மட்டுமே உங்களால் இரயில் நிலையத்திற்குள் இருக்க முடியும். 2 மணிநேரத்திற்கு மேல் இரயில் நிலையத்திற்குள் இருக்க வேண்டியிருப்பின் மீண்டும் ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் இல்லையென்றாலோ அல்லது 1 பிளாட்ஃபார்ம் டிக்கெட்டில் 2 மணிநேரத்திற்கு மேல் இரயில் நிலையத்திற்குள் இருந்தாலோ உங்களுக்கு ரூ.250 வரையில் டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிப்பதற்கு உரிமை உள்ளது. அதுவே இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் இரயிலில் இருந்து இறங்கிய பின்னர் பயணச்சீட்டு அல்லது பிளாட்ஃபார்ம் டிக்கெட் இன்றி டிக்கெட் பரிசோதகரிடம் சிக்குகிறார் என்றால் அந்த பிளாட்ஃபாரத்தில் கடைசியாக சென்ற இரயிலுக்கான பயணச்சீட்டு கட்டணத்தை இரட்டிப்பாக அவரிடம் இருந்து வசூலிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் உள்ளது.
இரயில் பயணச்சீட்டை போன்று பிளாட்ஃபார்ம் டிக்கெட்டும் பிளாட்ஃபாரத்தில் கிடைக்கும் இடவசதியை பொறுத்தே வழங்கப்படுகிறது. அதாவது, பிளாட்ஃபார்ம் ஏற்கனவே மக்களால் நிரம்பியுள்ளது எனில், அதன்பின் வரும் மக்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. பிளாட்ஃபார்ம் டிக்கெட்டிற்கு பதிலாக இலவச பாஸ்-ஸும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த இலவச பாஸ் ஆனது அனைவருக்கும் வழங்கப்படாது. தபால் துறை, இராணுவம் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கும், இரயில்வே போலீசாருக்கும் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் இளைஞர்களின் கல்விக்காக இயங்கும் ஸ்காட் கைடு அமைப்புகளுக்கும், இரயில்வே கண்ட்ராக்டர்கள் & அவர்களது பணியாளர்களுக்கும் இலவச பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இரயில் டிக்கெட்களுடன், தன்னை வழியனுப்பி வைக்க வருபவர்களுக்காக பிளாட்ஃபார்ம் டிக்கெட்டையும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக யுடிஎஸ் மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது. பண்டிகை காலத்தை காரணம் காட்டி இரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலையினை கடந்த 2022 அக்டோபர் 1ஆம் தேதி ரூ.10இல் இருந்து ரூ.20-க்கு இந்திய இரயில்வே நிர்வாகம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு, பிளாட்ஃபார்ம் டிக்கெட் வைத்திருந்தாலே போதும் இரயிலில் பயணிக்கலாம் என்கிற செய்தி வேகமாக நாடு முழுவதும் பரவியது. அதாவது, நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை வைத்திருந்தாலே போதும், இரயிலில் ஏறி டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என வதந்திகள் பரவியது. இவை அனைத்தும் வதந்திகள் என மறுத்த இந்திய இரயில்வே நிர்வாகம், டிக்கெட் இன்றி இரயிலில் பயணித்தால் அபாரதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி, அதற்கான தண்டனைகளையும் பெறுவீர்கள் என எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








