வந்தே பாரத் ரயில் விபத்திலேயே சிக்காதா? புது தொழிற்நுட்பத்தை சோதனை செய்த அதிகாரிகள்!
இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கிய கவச் தொழில்நுட்பம் தற்போது வட ரயில்வே மற்றும் வட மத்திய ரயில்வே ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் பல்வால் பகுதி முதல் விருந்தாவன் பகுதி வரை இது பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கவச் என்ற தொழிற்நுட்பத்தை இந்திய ரயில்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட ரயில்கள் எல்லாம் என்னதான் ரயிலில் இருக்கும் டிரைவர்கள் தவறு செய்தாலும் அது தவறை புரிந்து கொண்டு சரியாக செயல்பட்டு ரயில் விபத்துக்கு ஏற்படுவதை தவிர்க்கும்.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் பல்வேறு பகுதியிலிருந்து விருந்தாவன் பகுதி வரை உள்ள ரயில் பாதையில் இந்த கவச் தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்தது. இதை வட ரயில்வே மற்றும் வட மத்திய ரயில்வே அதிகாரிகள் ரயில்வே போர்டு சிஇஓ ஜெயவர்மா சின்காவுடன் இணைந்து சோதனை செய்தார்கள். இந்த சோதனைக்கு துணை தலைமை சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியர் குஷ் குப்தா மேற்பார்வை செய்தார்.
இந்த சோதனையின் போது சிவப்பு சிக்னல் செய்தால் ரயில் தானாக நிற்கப்படுகிறதா எதிரில் வேறு ரயில் வரும்போது குறிப்பிட்ட ரயில் தானாக லூப் லைனுக்கு மாறுகிறதா உள்ளிட்ட பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டது. இதற்காக ரயில்வே அதிகாரிகள் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்தினார்கள். வந்தே பாரத் ரயிலை வைத்து தான் இந்த சோதனைகள் செய்யப்பட்டது. தற்போது தயாரிக்கப்படும் அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதன்படி அதிகாரிகள் சோதனை நாளின் போது காலை 9:15 மணிக்கு பல்வால் பகுதியில் இருந்து வந்தே பாரத் ரயிலில் விருந்தாவன் நோக்கி கிளம்பினார்கள். இந்த ரயில் பயணத்தின் போது 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது அப்பொழுது சிவப்பு சிக்னல் வந்தது. ரயிலின் ஓட்டுனர் சிக்னலுக்கு ரயிலின் வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து ரயிலை அதிக வேகத்தில் இயக்கினார்.
அப்பொழுது சிவப்பு சிக்னலை 1300 மீட்டர் தூரத்திற்கு முன்பே உணர்ந்து கொண்ட கவச் தொழில்நுட்பம் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்து சரியாக சிக்னலுக்கு 9 மீட்டருக்கு முன்னால் முற்றிலுமாக ரயிலை நிறுத்திவிட்டது. இது நிச்சயம் மிக சிறந்த தொழில்நுட்பமாக இருக்கிறது. எந்தவித இன்புட்டும் இல்லாமல் ரயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அடுத்ததாக சிவப்புசிக்னல் மாற்றப்பட்டு ரயில் தொடர்ந்து பயணித்தது அப்பொழுது ரயிலை லூப் லைனுக்கு மாற்றுச் செல்வதற்காக திட்டமிடப்பட்டது. அப்பொழுதும் ரயில் 160கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. இதையடுத்து ரயில் லூப் லைனுக்கு மாற வேண்டிய திட்டம் அமலுக்கு வந்தவுடன் ரயிலில் வேகம் மெல்ல குறைந்து லூப் லைனில் ரயில் மாறும் போது சரியாக 30கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்கும் விதமாக வேகம் குறைக்கப்பட்டு உள்ள திட்டமிடப்பட்டபடி ரயில் லூப்லைனுக்கு மாறியது.
அடுத்ததாக ஆங்காங்கே இருக்கும் வேக கட்டுப்பாடு விஷயங்களையும் சரியாக இந்த கவச் தொழில்நுட்பம் கண்காணித்து வேகத்தை எந்தவித ஓட்டுநர் இன்புட்டும் இல்லாமல் குறைத்தும் கூட்டியும் பயணத்தை சிறப்பாக செய்து முடித்தது. இந்த இரு பகுதிக்கும் இடையே சுமார் 80கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. இந்த தூரத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த கவச் தொழில்நுட்பம் மூலம் வந்தே பாரத் ரயில் இயக்கியது. சரியாக 10:45மணிக்கு இவர்கள் விருந்தாவன் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார்கள்.
மீண்டும் விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து 11:10 மணிக்கு கிளம்பி 12:45 மணிக்கு பல்வால் பகுதிக்கு சென்று அடைந்தார்கள். இந்த பயணத்தின் போது தான் இந்த அனைத்து விதமான சோதனைகளும் செய்யப்பட்டன. இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த கவச் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு பகுதியாக அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கவச் தொழில்நுட்பம் நிச்சயம் ரயில்வே போக்குவரத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அமலுக்கு வந்து விட்டால் ரயிலில் விபத்து என்பதை இல்லாமல் போகும் சூழ்நிலை கூட ஏற்படும். இதனால் இந்தியாவில் ரயில் பயணம் என்பது பாதுகாப்பானதாக அமையும். இந்த கவச் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ரயிலை முற்றிலுமாக தானியங்கியாக இயக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








