டிரைவர் மட்டும் பார்க்கவில்லை என்றால் இரயிலின் கதை காலி!! பிரதமர் மோடி வந்த நாளிலா இப்படியெல்லாம் நடக்கும்?
ராஜஸ்தானில் வந்தே பாரத் இரயிலை கவிழ்க்கும் முயற்சியாக மர்ம நபர்கள் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ராஜஸ்தான் வருகையின் போது நடந்துள்ள இந்த சம்பவத்தை பற்றியும், தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தால், இரயில் கவிழ்வதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
ஓர் குறிப்பிட்ட பகுதியில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் முயற்சியாகவும், பரபரப்பை ஏற்படுத்தவும் இரயில் தண்டவாளங்களில் கற்களை அடுக்கி வைப்பது சமீப காலமாக மர்ம நபர்களது ஆயுதமாக உள்ளது. அவ்வாறு கற்களை அடுக்கி வைத்ததினால் இதுவரையில் எந்தவொரு இரயில் விபத்தும் ஏற்பட்டது இல்லை என்றாலும், இவ்வாறான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த வரிசையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் - ஜெய்பூர் இடையேயான இரயில் வழித்தடத்தில் மர்ம நபர்கள் சிலர் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர். சரியாக அந்த நேரத்தில் செல்லும் வந்தே பாரத் இரயிலை கவிழ்ப்பதற்கான முயற்சியாக இது நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை முதலில் கண்டறிந்தது வேறு யாரும் இல்லை, அந்த வழியாக வந்த வந்தே பாரத் இரயிலின் ஓட்டுனர் தான். தண்டவாளத்தில் கற்களை கண்டவுடன் உடனடியாக அவசர கால பிரேக்கை கொடுத்து இரயிலை அவர் நிறுத்தியுள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு தண்டவாளங்களின் மீது கற்களை வைப்பது இந்தியா முழுவதும் அவ்வப்போது நடக்கக்கூடிய விஷயம் தான்.

சில சமயங்களில் இவ்வாறான செயல்களை சமூக விரோதிகள் இல்லாமல், அருகில் வசிக்கும் சிறுவர்கள் விளையாட்டாக இவ்வாறு செய்வதும் உண்டு. ஆனால், ராஜஸ்தானில் இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் சிறுவர்கள் போல் தெரியவில்லை. ஏனெனில், தண்டவாளத்தின் மீது கற்களை மட்டுமின்றி, இரும்பு கம்பிகளையும் செங்குத்தாக சொறுகி வைத்துவிட்டு சென்று உள்ளனர்.
இந்த செயலை சமூக விரோதிகள் தான் செய்துள்ளனர் என நாங்கள் அடித்து கூறுவதற்கு மற்றொரு காரணம், இந்த சம்பவம் நடைபெற்ற அக்.2ஆம் தேதியில் ரூ.7,000 கோடி மதிப்பில் சில பல திட்டங்களை துவங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். பிரதமர் இருக்கும் மாநிலத்தில் இரயில் (அதுவும் வந்தே பாரத் இரயில்) கவிழ்ந்தால், அந்த செய்தி மாநிலம் முழுவதும் வேகமாக பரவும் அல்லவா... இதுதான் மர்ம நபர்களது திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர்- உதய்பூர் இடையே வந்தே பாரத் இரயில் சேவையை கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். ஜெய்பூர்- உதய்பூர் இடையேயான தொலைவு 435கிமீ ஆகும். இதனை வந்தே பாரத் இரயில் 6 மணிநேரம் 15 நிமிடங்களில் கடந்துவிடுகிறது. ஆனால், மற்ற இரயில்கள் இதே தொலைவை கடக்க 7 மணிநேரங்களை எடுத்துக் கொள்கின்றன.
தண்டவாளத்தில் கற்களை வைத்தால், இரயில் கவிழுமா? என கேட்டால், கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு வலிமையான கிரானைட் போன்ற பாறை கல்லை பெரிய அலவில் வைக்க வேண்டும். இலகுவான பாறைக்கற்கள், செம்மண் கூழாங்கற்கள் இரயிலை கவிழ்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியிருக்கையில், ஜெய்பூர் - உதய்பூர் இடையேயான வழித்தட தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிறு சிறு கற்களை எளிதாக இரயில் பொடி, பொடியாக்கி சென்றிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் போன்ற அதிவேக இரயில் இந்த கற்களை எளிதாக உடைத்து சென்றிருக்கும் என்றாலும், இரயிலை ஓட்டுனர் நிறுத்தியதற்கு காரணம், தண்டவாளத்தின் மீது கற்கள் மட்டும் தான் உள்ளனவா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பதை அறிவது அவசியம். அதுமிட்டுமின்றி, இவ்வாறான செயல்களை வெளியுலகத்திற்கு காட்டுவதும் அவசியமே.


Click it and Unblock the Notifications
