ஹை-ஸ்பீடில் வந்தே பாரத்தில் படுத்துக் கொண்டு போனால் எப்படி இருக்கும்! ஸ்லீப்பர் பெட்டிகள் எப்போது தாங்க வரும்?
வந்தே பாரத் இரயில்களில் படுக்கை வசதியையும், வந்தே மெட்ரோ இரயில்களும் அடுத்த 2024ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என முக்கிய ஐசிஎஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படுக்கை வசதியை கொண்ட வந்தே பாரத் இரயில்கள் மற்றும் வந்தே மெட்ரோ இரயில்கள் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முனைப்புடன் உள்ளது. அதேநேரம், முடிந்த வரையில் மற்ற நாடுகளை சார்ந்திராமல், உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முயல்கிறது. இந்த வகையில், மத்திய அரசாங்கம் சமீப காலங்களில் கொண்டுவந்த சிறப்பான திட்டம் வந்தே பாரத் இரயில்கள் ஆகும்.

முற்றிலுமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரயில்கள் என்ற பெயர் உடன், வந்தே பாரத் இரயில்கள் சென்னை ஐசிஎஃப்-இல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரயில்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவை மிகவும் எடை குறைவானவைகளாக உருவாக்கப்படுகின்றன. இதனால், குறைந்த ஆற்றலிலேயே வந்தே பாரத் இரயில்களில் அதிவேகத்தை எட்ட முடிகிறது.
இதன் விளைவாக, அரசாங்கத்திற்கு செலவீனங்கள் குறைவது மட்டுமின்றி, பயண நேரமும் குறைகிறது. இதன் காரணமாகவே, வந்தே பாரத் இரயில்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வழித்தடத்திலும் அடுத்தடுத்ததாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. வந்தே பாரத் இரயில்களில் உள்ள ஒரே குறை என்னவென்றால், அவற்றில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கிடையாது. இதனாலேயே, வந்தே பாரத் இரயில்கள் பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன.

ஆனால், இந்த நிலை விரைவில் மாற உள்ளது. ஏனெனில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் அடுத்த 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு உள்ளாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக இந்தியன் இரயில்வே துறையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய இரயில்களை உருவாக்குவதற்கான பிரத்யேக பிரிவு ஐசிஎஃப்-இல் 2024இல் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஎஃப்-இன் பொது மேலாளர் பிஜி மல்லையா கருத்து தெரிவிக்கையில், "வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் பிரிவு நடப்பு 2023-24 நிதியாண்டில் வெளியிடப்படும். அங்கு முதல் ரயில் உற்பத்தி செய்யப்பட்டு மார்ச் 2024இல் வெளியிடப்படும்" என்றார். வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் இந்தியாவின் இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் TMH குழுமத்தின் கூட்டணியில் தயாரிக்கப்பட உள்ளன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் மட்டுமின்றி, ஏழை, எளியோரும் பயணிக்கும் வகையில், மலிவான வந்தே பாரத் இரயில்களை உருவாக்கும் பணிகளிலும் ஐசிஎஃப் ஈடுப்பட்டு வருகிறது. வந்தே மெட்ரோ என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்த இரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கேற்ப, குறைவான தொலைவிற்கு மட்டுமே இயங்கக்கூடியவைகளாக வந்தே மெட்ரோ இரயில்கள் இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த இரயில்களில் 12 பெட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்களை காட்டிலும், வந்தே மெட்ரோ இரயில்கள் சற்று விரைவாக 2024 ஜனவரி மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என பிஜி மல்லையா தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற அளவில்-பெரிய நாடுகளில் இரவு நேர பயணங்கள் கட்டாயம் தேவைப்படக்கூடிய ஒன்றாகும். ஓர் குறிப்பிட்ட இரயிலை நாடு முழுவதும் சேவைக்கு கொண்டுவர விரும்புகிறீர்கள் எனில், அதனை இரவு நேரங்களிலும் இயக்குவது அவசியமாகும். இதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது மகிழ்ச்சியான விஷயமே.


Click it and Unblock the Notifications
