வந்தே பாரத் இரயில்களில் இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடலாம்!! ஸ்லீப்பர் கோச் எல்லாம் இனி இப்படித்தான்...
வந்தே பாரத் (Vande Bharat), இந்தியாவின் பொது போக்குவரத்தில் சமீப காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அதிவேக இரயில். மக்களின் போக்குவரத்தை விரைவுப்படுத்துவது மட்டுமின்றி, இது இந்திய இரயில்வேயின் தரத்தையும் மேம்படுத்தி உள்ளது. வந்தே பாரத் இரயில்கள் தற்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளன. முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் மட்டுமே தற்போதைக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், வந்தே பாரத் இரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான வீடியோவை மத்திய இரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் 77 வழித்தடங்களில் மொத்தம் 51 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை- பெங்களூர், சென்னை- கோவை, சென்னை- நெல்லை உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயங்குகின்றன. வந்தே பாரத் இரயில்களை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த இரயில்கள் அதிவேகமாக இயங்கக்கூடியவை என்பது மட்டுமின்றி, அதிநவீன சொகுசு வசதிகளை கொண்டவை ஆகும்.

முழுவதும் ஏசி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவு என பல்வேறு நவீன அம்சங்கள் வந்தே பாரத் இரயில்களில் உள்ளன. இருப்பினும், வந்தே பாரத் இரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் கிடையாது என்பது ஒரு குறையாகவே இருந்துவந்தது. மிகவும் தொலைத்தூர பயணங்களுக்கு இன்னும் வந்தே பாரத் இரயில்கள் உபயோகப்படுத்த துவங்கப்படவில்லை என்பது இதற்கு காரணம் ஆகும். இந்த நிலையில், ஒருவழியாக வந்தே பாரத் இரயில்களுக்கான ஸ்லீப்பர் பெட்டிகளை உற்பத்தி செய்ய இந்தியன் இரயில்வே முடிவெடுத்தது.
அதன்படி, பெங்களூரில் உள்ள BEML இரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் இரயில்களுக்கான படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்போது உள்ள இரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளை காட்டிலும் வந்தே பாரத் இரயில்களுக்கான ஸ்லீப்பர் பெட்டிகள் லக்சரியானவைகளாக உள்ளன. எந்த அளவிற்கு என்றால், இரயில் பெட்டிகளின் குளியலறைகளில் ஷவர் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி, தேவைப்பட்டால் சுடுத்தண்ணியை பெறலாம்.

ஒவ்வொரு படுக்கையிலும் தனித்தனியாகவும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் வந்தே பாரத் இரயில்களுக்கான ஸ்லீப்பர் பெட்டிகளுக்குள் எடுக்கப்பட்ட வீடியோவை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 10 நாட்களுக்கு இயக்கி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின் இந்த ஸ்லீப்பர் பெட்டிகள் வந்தே பாரத் இரயில்களில் இணைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.
இந்த சோதனை ஓட்டம் பெங்களூரில் உள்ள BEML தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பின், அடுத்த 3 மாதங்களுக்குள் வந்தே பாரத் இரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை பார்த்துவிடலாம் என கூறும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு மாதத்திலும் 2இல் இருந்து 3 வந்தே பாரத் இரயில்களை ஸ்லீப்பர் பெட்டிகள் உடன் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் ஒன்றில் 16 பெட்டிகள் இருக்கும். இதில், 11 பெட்டிகள் 3-அடுக்கு படுக்கை வசதியை கொண்டதாகவும், 4 பெட்டிகள் 2-அடுக்கு படுக்கை வசதியை கொண்டதாகவும், ஒரு முதல்-வகுப்பு பெட்டியும் இருக்கும். ஒட்டுமொத்தமாக, ஜெனரல் ஸ்லீப்பர் பெட்டிகளில் 611 படுக்கைகளும், 2-வகுப்பு பெட்டிகளில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பில் 24 படுக்கைகளும் அடங்குகின்றன.
வந்தே பாரத் இரயில்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 160kmph வேகத்தில் இயங்கக்கூடியவை. யுஎஸ்பி சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான கழிப்பறை உள்ளிட்டவை வந்தே பாரத் இரயில்களில் வழங்கப்படுகின்றன. சுடுத்தண்ணி உடன் ஷவர் வசதி ஆனது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலின் முதல்-வகுப்பு பெட்டியில் மட்டுமே கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிக்கெட் விலை சற்று அதிகமாக இருப்பினும் வந்தே பாரத் இரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில், ஸ்லீப்பர் பெட்டிகள் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், சொகுசு இரயிலாக இருப்பினும் இரவு நேர பயணங்களில் கால்களை நீட்டி படுத்து உறங்கினால் தான் சவுகரியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









