புல்லட் ரயில்களை தூக்கி சாப்பிட போகும் இந்திய ரயில்! உலகத்தையே அண்ணாந்து பாக்க வெச்சுட்டாங்க!
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 68 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்திய ரயில்வே துறை, தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) ஒரு உதாரணம். ஆனால் வந்தே பாரத் ரயில்கள் தற்போதைய நிலையில் இருக்கை வசதியுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ஸ்லீப்பர் (Sleeper) வசதி கிடையாது.

ஆனால் கூடிய விரைவில் ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா-கவுஹாத்தி வழித்தடத்தில், இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்தியா முழுக்க பல்வேறு வழித்தடங்களிலும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி கொண்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வின் (Railway Minister Ashwini Vaishnaw), எக்ஸ் பக்கத்தில் (முன்பு ட்விட்டர்), இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ஸ்திரத்தன்மையை எடுத்துக்காட்டும் வீடியோ ஆகும். அதாவது ஒரு சோதனையின் மூலமாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ஸ்திரத்தன்மை நமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்ட 4 டம்ளர்கள், பிரமீடு வடிவத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் வைக்கப்பட்டுள்ளன. அப்போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 182 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இவ்வளவு அதிக வேகத்தில் சென்றாலும் கூட, ஒரு துளி தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை.
இது இந்திய ரயில்வே துறையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் இந்த வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் தொலை தூர பயணங்களை 'ஸ்மூத்' ஆக மேற்கொள்ள முடியும் என மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும் என்பதால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கும், இந்திய பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
ஆனால் சோதனை ஓட்டத்தில், மணிக்கு 182 கிலோ மீட்டர்கள் வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டிருந்தாலும் கூட, அது பயணிகளின் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த வேகத்தில் இயக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தற்போதைய தண்டவாளங்களில் இருக்கும் சிக்கல்களே மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








