வந்தே பாரத்தில் இந்த ஒன்றை மட்டுமே குறையா சொல்லினு இருந்தோம்! அதுவும் இல்லாம போக போகுது!!
வந்தே பாரத் (Vande Bharat), இந்தியன் இரயில்வே (Indian Railway) போக்குவரத்தின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. குறைந்த எடை, அதன் மூலமாக வேகமான பயணம் என்பதுதான் வந்தே பாரத் இரயிலின் சிறப்பம்சம் ஆகும். இதன் மூலமாக மக்களின் பயணம் நேரம் வெகுவாக குறையும் என்பதால், வந்தே பாரத் இரயில்களை முடிந்தவரையில் நாட்டின் அனைத்து வழித்தடங்களிலும் விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்தியன் இரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வந்தே பாரத் இரயில்களில் சில குறைகளும் இருக்கின்றனர். அதில் முக்கியமானது, அதிக கட்டணம் ஆகும்.
மற்ற ஏசி இரயில்கள் அளவிற்கு இல்லையென்றாலும், வந்தே பாரத் இரயில்களில் பாமர மக்கள் அனைவரும் செல்லும் அளவிற்கு குறைந்த டிக்கெட் கட்டணம் இல்லை. இதனை புரிந்துக் கொண்ட இந்தியன் இரயில்வே இந்த 2024ஆம் ஆண்டில் 'அம்ரித் பாரத்' (Amrit Bharat) என்கிற பெயரில் ஏசி வசதி இல்லாத, குறைவான டிக்கெட் விலையை கொண்ட இரயில் சேவையை அறிமுகம் செய்தது.

ஏசி வசதி இல்லையென்றாலும், இயங்கும் வேகத்தில் வந்தே பாரத்துக்கும், அம்ரித் பாரத்துக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை. வந்தே பாரத் இரயிலை போன்று அம்ரித் பாரத் இரயில்களும் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கொண்டுவரப் படுகின்றன. ஆக, வந்தே பாரத் இரயிலின் அதிக டிக்கெட் கட்டணம் வேறு வழியில் சரிச்செய்யப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் இரயிலின் மற்றொரு குறை என்னவென்றால், இந்த அதிவேக இரயிலில் படுக்கை வசதிகள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே, அனைத்து வந்தே பாரத் இரயில்களும் பகல் நேரத்திலும், மாலை நேரத்திலும் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் இரயில்கள் இன்னும் நெடுத்தூர வழித்தடங்களில் பயன்படுத்தப் படாததற்கும் இதுவே காரணம் ஆகும். இந்த குறையை சரிச்செய்யும் முயற்சியிலும் இரயில்வே நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.

அதாவது, படுக்கை வசதியை கொண்ட வந்தே பாரத் இரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் (Sleeper Train) ஒன்று வட இந்தியாவில் கஜுராகோ மற்றும் மாகோபா நகரங்களுக்கு இடையே மணிக்கு 130கிமீ வேகத்தில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் பின்னர் இரயிலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டது.
இந்த முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற போதிலும், கஜுராகோ- மாகோபா இடையே 7 நாட்களுக்கு பல்வேறு விதமான வேகங்களில் இந்த இரயில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து, தீவிரமான சோதனைகளுக்காக ஜான்சி மற்றும் கஜுராகோ நகரங்களுக்கு இடையே 15 நாட்களுக்கு இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் தொடர்ச்சியாக ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது.

கவாச் (KAVACH) உடன் ஐரோப்பிய தரத்திற்கு இணையாக உருவாக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்களில் அதிர்வுகளை ஏற்படுத்தாத செமி-பர்மனெண்ட் கப்லர்கள் (Semi-permanent Couplers) மற்றும் ஆண்டி-க்ளிம்பர்ஸ் (Anti-Climbers) பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆற்றலை மிச்சப்படுத்துவதற்காக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் (Regenerative Braking System)-ஐ இந்த ஸ்லீப்பர் இரயில் கொண்டுள்ளது. மேலும், அவசர கால சூழலில் பயணிகள் இரயிலின் நிர்வாகியை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை ஓட்டங்களின் முடிவுகளை பொறுத்தே தெரியவரும். இந்த ஸ்லீப்பர் இரயில்கள் பயன்பாட்டிற்கு வந்த பின், சென்னை- டெல்லி, சென்னை- ஜெய்பூர் போன்ற பகல்-இரவு பயணங்களிலும் வந்தே பாரத் இரயில்களை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









