பணக்காரங்க பங்களாவுல கூட இவ்வளவு வசதிகள் இருக்காது! ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகள் இருக்குதா?
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் பெட்டிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரயில் பெட்டிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த ரயில் பெட்டியில் உள்ள வசதிகள் குறித்த சில முக்கியமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமான நாள் முதல் இன்று வரை வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இன்றளவும் இந்த ரயிலில் பயணிக்க மக்கள் அதிக விருப்பம் காட்டி வருகிறார்கள். மற்ற ரயில்களை விட அதிகமான வசதிகள் இந்த வந்தே பாரத் ரயிலில் இருப்பதால் மக்களுக்கு இந்த ரயில் மீதான மோகம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சர்வதேச தரத்தில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகிறது.

தற்போது வரை வந்தே பாரத் ரயிலில் வெறும் இருக்கையில் கொண்ட பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உருவாக்கும் பணியை தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ரயில் பெட்டிகள் நிச்சயம் இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டி கொண்ட ரயிலின் வடிவமைப்பை பொறுத்தவரை டைப்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் முன்பகுதி கழுகு போன்ற வடிவமைப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 3 டயர் ஏசி, 2 டயர் ஏசி, மற்றும் முதல் வகுப்பு ஏசி என்று மூன்று விதமான ரயில் பெட்டிகள் இருக்கும்.

மொத்தம் உள்ள 16 பெட்டிகளில் 113 டயர் ஏசி பெட்டிகளும், நான்கு 2 டயர் ஏசி பெட்டிகளும், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் பயணம் செய்ய முடியும். அதில் 611 பயணிகள் 3 டயர் ஏசி பெட்டிகளிலும், 188 பயணிகள் 2 டயர் ஏசி பெட்டிகளிலும், 24 பயணிகள் முதல் வகுப்பு பெட்டியிலும் பயணம் செய்ய முடியும்.
இதில் 3 டயர் ஏசி பெட்டியை பொருத்தவரை தற்போது உள்ள ரயிலில் இருக்கும் வசதிகளை விட இதில் கூடுதலான வசதிகள் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. முக்கியமாக எக்ஸ்ட்ரா குஷன் கொண்ட படுக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள இருக்கை வசதிகளை விட சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் உட்புறத்தை பொருத்தவரை கிரீம், மஞ்சள் மற்றும் மரம் ஆகிய நிறங்களை கொண்டு பார்ப்பதற்கு பிளசண்டாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மிடில் மற்றும் அப்பர் பெர்த்துக்கு ஏறும் ஏணிப்படிகள் தற்போது உள்ள ரயிலில் இருக்கும் அளவுக்கு சிரமமாக இல்லாமல் சுலபமாக பயணிகள் மேலே ஏறுவதற்கு வசதியாக வடிவமைக்கப்படுகிறது.
மேலும் இந்த ரயிலில் பொதுவான இடங்களில் உள்ள லைட்டுகள் எல்லாம் சென்சாரை கொண்ட லைட்டுகளாக இருக்கிறது. அந்த பகுதியில் பயணிகள் வரும்போது தானாக லைட் எரியும் பயணிகள் யாரும் இல்லாத நேரத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அந்த லைட் ஆஃப் ஆகிவிடும். இரவு நேரங்களில் சிறப்பான வெளிச்சம் தரும் வகையில் தேவையான இடங்களில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கியமாக இரவு நேரங்களில் பயணிகள் நடந்து செல்லும் போது அவர்களுக்கு பாதையில் வெளிச்சம் தெரிவதற்காக கீழே மட்டும் எல்இடி லைட் ஸ்ட்ரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் பயணிகள் நடந்து செல்லும் போது மட்டும் எரியும் வகையில் செயல்படும் இந்த வெளிச்சம் எந்த வகையிலும் தூங்கிக் கொண்டிருக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.
இது மட்டுமல்லாமல் ரயிலுக்குள்ளே இருக்கும் கதவுகளான ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டிக்கு செல்லும் பாதையில் இருக்கும் கதவுகள் மற்றும் கழிவறை பகுதியில் இருக்கும் கதவுகள் எல்லாம் தானியங்கி கதவுகளாக வடிவமைக்கப்படுகின்றன. இது அனைத்தும் சென்சார் அடிப்படையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எப்பொழுதும் ரயிலுக்குள்ளே வெளியில் உள்ள சத்தம் உள்ளே கேட்காதபடி அமைதியாக இருக்கும்.

இந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டாய்லெட் வசதிகள் இருக்கிறது. இது மட்டுமல்ல தற்போது உள்ள வந்தே பாரத் ரயிலில் இருப்பதைப் போல பயணிகள் ரயிலுக்குள்ளே ஏறும் இடத்தில் இருக்கும் கதவுகள் தானியங்கி கதவுகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் உள்ள கழிவறைகளை பொருத்தவரை விமானத்தில் உள்ள கழிவறை போல பயோ டாய்லெட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து துர்நாற்றங்கள் வெளியே வராதபடி இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் கழிவறை உள்ளே இருக்கும் வாஷ்பேஷன்கள் எல்லாம் தண்ணீர் வெளியே சிந்தாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முதல் வகுப்பு ஏசி பெட்டியில் உள்ள கழிவறைகளில் குளிப்பதற்கான ஷவர் மற்றும் சுடுதண்ணீர் வசதிகளும் உள்ளன. இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அனைத்தும் தற்போது உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகள் போல செமி பெர்மனென்ட் கப்லர்கள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு ஜெர்க் இல்லாத சொகுசான பயணம் கிடைக்கும்.
இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலில் ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டிக்கு செல்லும் பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டு எந்தவித பிரச்சினையும் இல்லாத பாதுகாப்பான பெட்டிகளாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்கு செல்ல முடியும். இதனால் ரயில் உள்ளே பயணிகள் பாதுகாப்பாக உணர முடியும்.
இந்த ரயிலின் வேகத்தை பொருத்தவரை மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகளுக்கு பயண நேரம் என்பது வெகுவாக குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ரயில்கள் நிச்சயம் சர்வதேச அளவில் உள்ள ரயில்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் மற்றும் வசதிகள் நிறைந்த இந்த ரயிலில் பயணிக்க மக்கள் நிச்சயம் விரும்புவார்கள். இந்த ரயில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் இன எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









