நீர் நிரம்பிய டம்ளர் வைத்து நடத்தப்பட்ட சோதனை... 180kmph வேகத்தில் காற்றை கிழித்து கொண்டு போன புது வந்தே பாரத்
இந்திய ரயில்வேயின் எதிர்காலத் திட்டமான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்திய மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் இரயில் நிலையத்தில் இருந்து கோட்டா மாநகரம் வழியாக மத்திய பிரதேசத்தின் நாக்டா வரையிலான 333 கிமீ தொலைவிற்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது, ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டியது. சென்னை ஐசிஎஃப் (Integral Coach Factory) மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) இணைந்து உருவாக்கியுள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், வந்தே பாரத் சேவையை இரவு நேரப் பயணங்களுக்கும் விரிவுபடுத்தும். எடை குறைவான உடலமைப்புடன், புதிய ஏரோடைனமிக் வடிவமைப்பில் இந்த ஸ்லீப்பர் இரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சவாய் மாதோபூர்-கோட்டா-நாக்டா வழித்தடத்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் நடந்தப்பட்ட இந்த சோதனையின்போது, ரயில் சீரான நிலைத்தன்மை, பிரேக்கிங் திறன் மற்றும் டிராக்ஷன் துல்லியம் ஆகியவற்றை நிரூபித்தது. சாய்வான மற்றும் வளைவான பகுதிகளிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக மேற்கு மத்திய ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், 16 முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டுள்ளது. இதில், 11 ஏசி மூன்றடுக்கு, 4 ஏசி ஈரடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டிகள் அடங்கும். இந்த பெட்டிகள் அனைத்திலும் தானியங்கி கதவுகள் உள்ளன. வழக்கமான மற்ற விரைவு இரயில்களை போன்று இதிலிலும் பெட்டிகளுக்கு இடையே நடந்து செல்லும் பகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சாதாரணமான விரைவு இரயில்கள் போன்று இல்லாமல், இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் ஒரே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில், தனிப்பட்ட படுக்கை வசதிகள், மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் வசதி மற்றும் ஒலிப்புகாத உட்புற கேபின்கள் உள்ளன. சீரான குளிரூட்டலுக்கு இரு காற்று குழாய்களும், தானாக மங்கும் வசதியுடன் கூடிய எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நீண்ட தூரப் பயணங்களுக்கான சௌகரியத்தை அதிகரிக்க, BEML மேம்படுத்தப்பட்ட அதிர்வு தடுப்பு மற்றும் தரைத் தள இன்சுலேஷன் வசதிகளையும் வழங்கியுள்ளது. வழக்கமான என்ஜினுக்குப் பதிலாக, சுய-உந்துவிசை கொண்ட பெட்டிகள் மூலம் இயங்கும் இந்த ரயில், 2 நிமிடம் 20 வினாடிகளில் 160 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

ஒவ்வொரு மோட்டார் பெட்டியிலும் மீளுருவாக்க பிரேக்கிங் (Regenerative braking) மற்றும் இழுவை மாற்றிகள் (Traction converters) உள்ளன. 2025 டிசம்பர் வரை கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டு, வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலின் பிரேக்கிங், பயணிகளின் வசதி மற்றும் ஆற்றல் திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.
இந்திய இரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) சான்றிதழுக்குப் பிறகு, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் வணிகச் சேவை 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ், சுமார் 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ICF மற்றும் BEML இணைந்து தயாரிக்கும் இந்த ரயில்கள், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட உள்ளதாகவும், இது பயண நேரத்தைக் குறைத்து, மேம்படுத்தப்பட்ட உட்புற வசதிகளுடன் கூடிய பயண அனுபவத்தை வழங்கும் எனவும் இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக தற்போது ராஜஸ்தான்- மத்திய பிரதேச இடையே RDSO-ஆல் இயக்குநரகக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் நவம்பர் 17 வரை நடத்தப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் "மிஷன் ரஃப்தார்" மற்றும் "மிஷன் கதி சக்தி" திட்டங்களின் கீழ், இந்திய ரயில்வேயின் அதிவேக வலையமைப்புக்கான ஒரு முக்கிய படியாக இது கருதப்படுகிறது. சென்னை-டெல்லி மற்றும் மும்பை-மதுரை போன்ற நீண்ட தூர இரவுப் பயணங்களுக்கும் அதிவேக வந்தே பாரத் இரயில்களை பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









