வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைய போகுதா!.. லோக்கல் டிரெயினைபோல இதிலும் கூட்டம் குவிய போகுது!
வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைக்கப்பட இருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த குஷியில் ஆழ்ந்திருக்கின்றனர். ஏன் இந்தத் திடீர் முடிவு?, எவ்வளவு வரை கட்டணம் குறைக்க வாய்ப்பு இருக்கின்றது என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.
தொடக்கத்தில் பரபரப்பாகக் காணப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சில தற்போது வெறிச்சோடிக் காணத் தொடங்கி இருக்கின்றன. பெரும் அளவில் காலியான இருக்கைகள் உடனே அவை இயங்கிக் கொண்டிருப்பதாகத் தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்மாலும் அதைச் சில பகுதிகளில் பார்க்க முடிகின்றது.

வந்தே பாரத் ரயிலின் இந்த நிலைக்குக் காரணம் அதன் அதிகக் கட்டணமே என பலரால் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வந்தே பாரத் ரயில்களின் அதிகக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்க இந்தியன் ரயில்வேஸ் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
குறிப்பிட்ட சில பகுதிகளில், அதாவது, வரவேற்பு குறைந்து காணப்படும் வழித் தடத்தில் மட்டும் கட்டணத்தைக் குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், எவ்வளவு குறைக்கப்பட இருக்கின்றது?, எந்தெந்த வழித் தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைக்கப்பட இருக்கின்றது?, எப்போதில் இருந்து கட்டணம் குறைக்கப்படும் என்கிற எந்த விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதிக சொகுசான ரயில் பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதே வந்தே பாரத் ரயில்கள் ஆகும். மிகவும் சொகுசான இருக்கைகள், அதி நவீன கூலிங் சிஸ்டம், அதி விரைவான பயணம் என அனைத்திலும் அசத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இருக்கின்றன.
இந்த ரயில்களால் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். ஆனால், இந்தியாவின் சில பகுதிகளில் இந்த உச்சபட்ச வேகத்தைத் தாங்குகின்ற அளவிற்கு இருப்புப் பாதைகள் இல்லை. இதன் காரணத்தினால் ஓர் பகுதியில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும், மற்றொரு பகுதியில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் என நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வேகங்களில் வந்தே பாரத் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் இந்த ரயில் மணிக்கு 100 கிமீ தொடங்கி 110 கிமீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், குறைவான நிறுத்தங்களில் மட்டுமே இந்த ரயில் நிறுத்தப்படுகின்றது. எனவேதான், பிற ரயில்களைக் காட்டிலும் குறைவான நேரத்தில் வந்தே பாரத் ரயிலால் அதன் இலக்கை சென்றடைய முடிகின்றது.
இதன் காரணத்தினாலேயே பலர் வந்தே பாரத் ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல வரவேற்பே வந்தே பாரத் ரயில்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் கூட்டம் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க அலை மோதிக் கொண்டிருக்கின்றன.
அதேவேளையில், குறைவான தூர இடைவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் சிலவற்றில் மக்கள் பயன்பாடு குறைந்து காணப்படுகின்றது. இத்தகைய வழித் தடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தையே குறைக்க ரயில்வேஸ் திட்டமிட்டு இருக்கின்றது. 21 சதவீதம் தொடங்கி 55 சதவீதம் வரை குறைவான பயணிகளுடன் சில வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் பெரும்பாலானவை மூன்று அல்லது நான்கு மணி நேரங்களை மட்டுமே பயண நேரமாகக் கொண்டவையாகும். இவற்றில் பயணிக்க அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, போபால்-ஜபால்பூர் இடையில் இயங்கும் வந்தே பாரத் ரயிலுக்கு கட்டணமாக ரூ. 950 (வழக்கமான ஏசி இருக்கைக்கான கட்டணம்) தொடங்கி ரூ. 1,525 (எக்ஸிகியூட்டீவ் இருக்கைக்கான கட்டணம்) வரை வசூலிக்கப்படுகின்றது.
இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கின்ற காரணத்தினால்தான் பலர் குறைந்த தூர வந்தே பாரத் ரயில்களை பயன்படுத்தத் தவிர்க்கின்றனர். இந்த அதிக விலையையே ரயில்வேஸ் விரைவில் குறைக்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இந்தூர்-போபால், போபால்-ஜபால்பூர் மற்றும் நாக்பூர்-பிளஸ்பூர் ஆகிய இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட இருப்பது லேசாக உறுதியாகி உள்ளது.
ஆனால், இதனை இந்தியன் ரயில்வேஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை 46 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இவற்றில் காசர்கோடு-திருவனந்தபுரம் மற்றும் காந்தி நகர்-மும்பை சென்ட்ரல் இடையில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களுக்கே மிக சிறப்பான டிமாண்ட் ரயில் பயணிகள் மத்தியில் நிலவிக் கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒருவேளை குறைவான பயண நேரம் மற்றும் தூரத்தைக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைக்கப்படும் என எனில் அவற்றைப் பயன்படுத்த மக்கள் அதிகம் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது, பலரும் அந்த ரயிலைத் தவிர்க்க அதன் அதிக கட்டணமே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









